tamilnadu

img

போராடி சிறைப்பட்டு வென்றனர் நிலம்

பி.சம்பத்  
மத்தியக்குழு உறுப்பினர் - சிபிஐ (எம்)

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரின் ஒரு பகுதி தான் தங்கம் நகர். இங்குள்ள புறம்போக்கு நிலத்தில் குடிசைகளும், சிறிய அளவிலான வீடுகளும் அமைத்து 36 ஏழைக் குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. இவர்களில் கணிசமானவர்கள் தலித் மக்கள். இவர்களோடு 6 குடும்பங்கள் இஸ்லாமிய குடும்பங்களாவர். இவர்களின் மூதாதையர் காலம் தொடங்கி 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இடத்தில் இவர்கள் குடியிருந்து வந்தார்கள். இவர்கள் அனைவரும் கூலி உழைப்பாளிகள். இவர்கள் குடியிருந்த இடத்தின் ஒரு பகுதியை குடியாத்தத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவரும், எவ்வித சமூக விரோதச் செயலும் செய்ய தயங்காதவருமான செல்வம் என்பவர்  தனக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடி வந்தார். அடிக்கடி இந்த ஏழை மக்கள் குடியிருந்து வரும் தங்கம் நகர் பகுதிக்கு வந்து அம்மக்களை மிரட்டி வந்தார். உடனடியாக அவர்கள் குடியிருக்கும் பகுதியைக் காலி செய்ய வேண்டுமென்றும் இல்லையேல் தானே பலவந்தமாக காலி செய்து அப்புறப்படுத்துவேன் என்றும் அடாவடித்தன மாக மிரட்டி வந்துள்ளார். செல்வம் இவ்வாறு மிரட்டியும், அடாவடித் தனமாகவும் செயல்படுவது குறித்து தங்கம் நகர் பகுதியில் குடியிருந்து வந்த ஏழை, எளிய மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் இதர அரசு உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி தங்களுக்கும், தாங்கள் குடியிருந்து வரும் நிலம், வீடுகளுக்கும் பாதுகாப்பு தருமாறும் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் மாவட்ட அரசு நிர்வாகம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் அதன் மீது எவ்வித நட வடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்துள் ளனர். வயது வந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டு அந்த 36 குடும்பங்களும் அன்றாடம் அச்சத்துடனேயே வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் 14.04.2010 அன்று திடீரென செல்வம் சமூக விரோதிகள் அடங்கிய கும்பலு டன் தங்கம் நகருக்குள் புகுந்துள்ளார்.

அவர்கள் ஒவ்வொருவரும் பயங்கர ஆயுதங்களுடன் வந்திறங்கினர். அங்கு வாழ்ந்து வந்த ஏழை, எளிய மக்களை அடித்து உதைத்து அவர்களை வீடுகள், குடிசைகளிலிருந்து அப்புறப்படுத்தி யுள்ளனர். அந்த மக்கள் எவ்வளவோ கெஞ்சி யும், கதறியும் அதைப் பொருட்படுத்தாமல் அரா ஜகமான முறையில் அவர்களை விரட்டி யடித்துள்ளனர். அவர்கள் நடத்திய தாக்குதலில் பலரும் காயமடைந்தனர். வீடுகள், குடிசைகளை நாசப் படுத்தி அப்புறப்படுதியது மட்டுமல்லாமல், அவர்களின் குறைந்தபட்ச வாழ்வாதாரமாக இருந்த பொருட்கள், உடமைகளையும் அடித்து நொறுக்கினர். பல மணி நேரம் செல்வம் கும்பலின் காட்டு தர்பார் தாக்குதல் நடந்துள்ளது. அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரி களுக்கு தகவல் தெரிந்தும் அவர்கள் எவ்வித தலையீடும் செய்யவில்லை. அந்த ஏழை, எளிய மக்கள் தங்கள் குழந்தைகள், பெண்கள், முதியவர் கள் அனைவரும் நடுத்தெருவில் நிறுத்தப் பட்டனர். ஏழை, எளிய பட்டியலின மக்களும், இஸ்லா மிய மக்களும் தங்களது அன்றாட வாழ்வை நடுத்தெருவில் நடத்த வேண்டியதாயிற்று. சம்ப வம் நடந்த பிறகும் பல நாட்கள், பலமுறை அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்பட முறையிட்டுக் கொண்டே இருந்தனர். ஆனால் அரசு நிர்வாகமோ சிலைபோல் அமைதி காத்தது. ஒருமுறை அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் தாங்கள் குடியிருக்க மாற்று ஏற்பாடுகள் செய்து தர வேண்டுமென்று மன்றாடிக் கேட்டுக் கொண்டி ருந்த போது, தற்செயலாக வேறு பிரச்சனை களுக்காக சிபிஐ (எம்) அப்போதைய மாவட்டச் செயலாளர் நாராயணனும் இதர சில தலை வர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற னர்.

அப்போது இம்மக்கள் மாவட்ட ஆட்சியரி டம் தங்கள் துயரங்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்ததை இத்தலைவர்கள் கவனித்த னர். பிறகு அம்மக்களை நேரில் வரவழைத்து விபரங்களைத் தெரிந்து கொண்டனர். இப்பிரச் சனையில் சிபிஐ (எம்) - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையிடும் என்றும், தாங்கள் நேரடியாக தங்கம் நகர் பகுதிக்கு வருவோம் என்றும் ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர். அதன்படி குடியாத்தம் சிபிஐ(எம்) தாலுகா குழு தலைவர்களோடு, கட்சி மாவட்ட தலை வர்கள், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர்கள் தங்கம் நகருக்குச் சென்று அம்மக்களை சந்தித்தனர். வாழ்வாதா ரங்கள் அனைத்தும் இழந்து நிராயுதபாணியாக நடுத்தெருவில் விடப்பட்ட அம்மக்களின் துயரங்களை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அம்மக்களின் துயர்போக்கிட களத்தில் இறங்கினர். மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் முக்கிய அதிகாரி களைச் சந்தித்து கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக இப்பிரச்சனையின் அவ சரத் தன்மையினை விவரித்தனர். அதிகாரிகள் தலையிடுவதாக ஏற்றுக் கொண்டனர். ஆனால் ஏற்றுக் கொண்டபடி செயல்படவில்லை. இந்நிலையில் 36 ஏழை, எளிய தலித் மற்றும் இஸ்லாமியர் குடும்பங்களுக்கு மாற்று இடமும், தேவையான நிவாரணமும் வழங்கக் கோரி குடியாத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் சிபிஐ(எம்), தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமல்ல, அவர்களுக்கு ஆதரவாக இதர பகுதி உழைப்பாளிகளையும் செங்கொடி இயக்கம் களத்தில் இறக்கியது. கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட மற்றும் தாலுகாகுழு தலைவர்கள் தலைமை ஏற்றனர். ஆயினும் அரசு நிர்வாகம் ஏற்றுக் கொள்ள மறுத்தது. அடுத்து, வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாதிக்கப்பட்ட மக்களோடு திரளாக இதர பகுதி மக்களும் பங்கேற்றனர். மாவட்டத் தலைவர்கள் இப்போராட்டத்தில் தலைமை ஏற்றனர். போராட்ட நாளன்று மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து உடனடியாக இப்பிரச்சனையில் தீர்வு காண வலியுறுத்தினர். வீடுகள், உடமைகளை இழந்து நடுத்தெருவில் விடப்பட்ட அம்மக்களின் பிரச்சனைகளில் அரசு நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டுமானால், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக பகுதியில் குடியேறும் போராட்டத்தை நடத்துவோம் என மாவட்ட நிர்வாகத்தை எச்சரித்தனர். அதன் பிறகும் பல நாட்கள் அரசின் நிலைபாட்டில் அசைவில்லை என்ற நிலையில் 12.08.2010 அன்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகப் பகுதியில் குடியேறும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அன்று காலை 10 மணியளவில் குடியாத்தம் பேருந்து நிலையம் முன்பிருந்து போராட்ட ஊர்வலம் புறப்பட்டது. 500 பேர் வரை பங்கேற்றனர். இப்போராட்டத்தில் பங்கேற்க தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அப்போதைய மாநில தலைவர் பி.சம்பத், கே.சாமுவேல்ராஜ் (பொதுச் செயலாளர்) வருகை தந்தனர். இவர்களோடு தயாநிதி (இப்போதைய சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர்) சங்கரி (கட்சியின் இப்போதைய மாநிலக்குழு உறுப்பினர்), மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நாராயணன், காசிநாதன், லதா (அப்போதைய எம்.எல்.ஏ.) செல்வம், சக்திவேல், சாமிநாதன், காத்தவராயன், அருந்ததியர் அமைப்பின் தலைவர் காத்தவராயன் ஆகியோரும் இணைந்து போராட்டத்திற்கு தலைமையேற்றார்கள். ஊர்வலம் பிரதான சாலையில் வழியாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சென்றடைந்தது.

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்ட ஊர்வலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் நெருங்கிய நிலையில் கோட்ட வருவாய்துறை அலுவலர், தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அவர் ஒரு பெண் அதிகாரி. போராட்டத்தின் தீவிரத்தன்மையையும், உறுதியையும் கண்ட அரசு நிர்வாகம் அசைந்தது. வீடுகள், குடிசைகள் அப்புறப்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் தர அரசு ஏற்றுக் கொண்டது. அதற்கான எழுத்துப்பூர்வமான உடன்பாடு செய்யுமாறு வலியுறுத்திய போது வருவாய் கோட்டாட்சி யரும் அதனை ஏற்றுக்கொண்டார். அத்தகைய உடன்பாடு தயாராகிக்கொண்டிருந்தது. அப்போது கோட்டாட்சியருக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. அவர் வெளியே சென்று அலைபேசியில் பேசினார். பேசிவிட்டு வரும்போது அவரது முகம் மாறியிருந்தது. அவருடைய பேச்சு தொனியிலும் மாற்றம் தெரிந்தது. மாற்று இடத்திற்கு வாய்ப்பில்லை என்று தலைவர்களிடம் அவர் தெரிவித்தார். அதற்கான காரணம் என்ன என்று தலைவர்கள் கேட்டபோது பதில் இல்லை. பிறகு தான் எங்களுக்கு ஒரு உண்மை தெரிந்தது. அது என்னவென்றால் வேலூரைச் சார்ந்த அமைச் சர் சென்னையிலிருந்து தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது சிபிஐ(எம்), தீண் டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்களோடு எவ்வித பேச்சுவார்த்தையும், உடன்பாடும் செய்து கொள்ள வேண்டாமென தெரிவித்த தாகவும் அறிந்தோம். இதோடு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் படி மேலிடத்திலிருந்து தகவல் வந்ததாகவும் ஒரு காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

இச்சூழலில் ஏராளமான காவலர்கள் அலுவலகத்திற்குள் நுழைந்து தலைவர்களை சூழ்ந்து கொண்டனர். அதுவரை பேச்சுவார்த்தை யில் எங்களுடன் இனிமையாக பேசிக் கொண்டி ருந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனது அலைபேசியில் யாரிடமோ பேசிவிட்டு வந்த பிறகு எங்களைப் பார்த்து அனைவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதைச் சொல்லும் போது இரவு 8 மணி இருக்கும். ஒப்பந்தம் என முடிவாகி விட்டபிறகு ஏன் இந்த கைது நடவடிக்கைகள் என்று கேட்ட போது “மேலிடத்து உத்தரவு” என்று பதிலளித் தார். எங்களைக் கைது செய்து கொண்டிருந்த போதே, அலுவலகத்திற்கு வெளியே போராடிக் கொண்டிருந்த தோழர்கள் பலரையும் காவல் துறையினர் கைது செய்து கொண்டிருந்தனர். இதை எல்லாம் பார்த்த பிறகு சமூக விரோதி செல்வத்திற்கு அப்போதைய தமிழக அரசிடம் இவ்வளவு செல்வாக்கு இருக்கிறதா என்பதை புரிந்து கொண்டோம். மொத்தம் 59 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் லதா எம்.எல்.ஏ., உட்பட 16 பேர் பெண்கள். எங்களை முதலில் காவல் நிலையம் அழைத்துச் சென்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பிறகு நள்ளிரவு வேலூர் மாஜிஸ் திரேட் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அவர் வீட்டுக் கதவைத்தட்டி எங்களை வேலூர் சிறை யில் அடைக்க போலீசார் அனுமதி பெற்றனர்.பிறகு எங்களை சிறைக்கு அழைத்துச் செல்ல வண்டிகளில் ஏறுமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர். அப்போது நேரம் இரவு 11.30 மணியை தாண்டியது. எங்கள் யாருக்கும்  அதுவரை உணவு வழங்கப்படவில்லை. நாங்கள் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டோம். கைதான தோழர்கள் “போலீஸ் அராஜகம் ஒழிக... காவல்துறையே உணவு வழங்கு” என்று முழக்கமிட ஆரம்பித்தனர். எங்களது நிர்ப்பந்தத்தால் அதிகாரிகள் அந்த நள்ளிரவு நேரத்தில் திறந்திருந்த ஒரு உணவு விடுதியில் உணவுப் பொட்டலங்களை வாங்கி வழங்கினர்.

இரவு உணவு முடிந்த பிறகு எங்களை வேன்களில் ஏற்றிக் கொண்டு வேலூர் சிறையில் அடைத்த னர். பெண்களை தனியாக பெண்கள் சிறையில் அடைத்தனர். அப்போது நள்ளிரவு 1.00 மணி. தோழர் சங்கரி தனது 3 வயது குழந்தையுடன் கைதாகி இருந்தார். சிறை செல்லும்போது குழந்தையை தனது சகோதரர் குடும்பத்தில் ஒப்படைத்து விட்டு சிறை சென்றார். சிறையில் அடைத்த மறுநாள் லதா எம்.எல்.ஏ., உடல்நலம் சரியில்லாததால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு ஜாமீனில் வெளியே சென்றார். தோழர் சங்கரி சிறையில் இருந்ததால் பெண்களுக்கு தைரியமும், உற்சாகமும் குறைய வில்லை. தோழர்கள் அனைவரும் மிகுந்த கட்டுப்பாடுடனும், உற்சாகத்துடனும் சிறையில் இருந்தனர். நாங்கள் மொத்தம் 10 நாட்கள் சிறையில் இருந்தோம். 10 நாட்களும் சிறையில் அரசியல் விவாதமும், வகுப்புகளும் நடந்தன.  சிறையில் இருந்தபோது கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் வி.மீனாட்சி சுந்தரம் இருவரும் சிறைச்சாலைக்கு வந்து எங்களை சந்தித்து  வாழ்த்து தெரிவித்தனர். 10 நாட்களுக்கு பிறகு வெளியே இருந்த நம் தோழர்கள் முயற்சி எடுத்து எங்கள் அனைவரை யும் ஜாமீனில் விடுவித்தனர். மொத்தத்தில் இந்த சிறை அனு பவம் எங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்தது. சிறையிலிருந்து வெளிவந்த பிறகும் நமது தோழர்கள் ஓய்ந்திருக்கவில்லை. அம்மக்களுக்கு நிலம் கிடைப்பதற் கான இயக்கங்களைத் தொடர்ந்தனர். நமது தொடர்ச்சி யான நிர்பந்தத்தினால் அரசு நிர்வாகம் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தது. ஆம். சிறைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு ஏற்பட இருந்த ஒப்பந்தம் ரத்து ஆனது அல்லவா? அந்த ரத்தான ஒப்பந்தம் சிறைக்கு சென்று வந்த பிறகும் தொடர்ந்த நம் போராட்டங்களால் மீண்டும் ஒப்புக் கொள்ளப் பட்டு அமலானது.  நீண்ட காலம் போராடி வந்த சூழலின் ஒரு கட்டத்தில் அம்மக்கள் சிபிஐ(எம்) தலைமையை ஏற்றுக் கொண்டு சிறை சென்றனர். சிறையிலிருந்து விடுதலையான பின்பும் உறுதியுடன் போராடியதால் 36 குடும்பங்களுக்கும் மாற்று நிலம் வழங்கப்பட்டது. அதற்கான பட்டா அம்மக்களுக்கு வழங்கப்பட்டது. அம்மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. தாங்கள் தனித்தும், பிறகு சிபிஐ(எம்), தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைமையில்  இணைந்தும் நடத்திய போராட்டம் வெற்றியடைந்ததாக உணர்ந்தனர். அதற்காக மகிழ்ச்சியையும், நன்றியையும் வெளிப்படுத்தினர். அந்த வெற்றியை ஒரு விழாவாகவும் கொண்டாடினர். இந்த விழாவில் அவர்களுக்கு ஆதரவாக போராடிய மக்களும் கலந்து கொண்டனர். வெற்றி விழாவில் சிறை சென்ற அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஜி.ராமகிருஷ்ணன், வி.மீனாட்சிசுந்தரம் பங்கேற்றனர். அடக்குமுறைகளால் போராட்டங்கள் தோற்பதில்லை என்ற வரலாறு மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டது.