tamilnadu

அரசுப் பேருந்து மோதி பலியான வியாபாரி குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு

வேலூர், ஏப்.27-அரசுப் பேருந்து மோதி பலியான வியாபாரியின் குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வேலூரை அடுத்த மேல்மொணவூரைச் சேர்ந்தவர் மகேந்திரன் (44) மளிகை வியாபாரி. இவர், கடந்த 2018 மார்ச் 9-ஆம் தேதி அப்துல்லாபுரத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்தார். அப்போது, சேலம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக மகேந்திரன் மீது மோதியது.இந்த விபத்தில் மகேந்திரன் பலியானார். இந்த விபத்து குறித்து விரிஞ்சிபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.இந்நிலையில், ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி மகேந்திரனின் மனைவி கண்ணகி (40)வேலூர் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் மீது விசாரணை நடத்திய நீதிபதி வெற்றிச்செல்வி, மகேந்திரனின் மனைவி, குழந்தைகள், பெற்றோருக்கு ரூ. 15 லட்சத்து 2ஆயிரத்தி 500 இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்தார். 

;