tamilnadu

img

பட்டாசு ஆலையில் தீ விபத்து - 2 பேர் பலி

சாத்தூர் அருகே  பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள துலுக்கன்குறிச்சியில் கார்னேஷன்  பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பலவகையான சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆலையில் உள்ளூர் மற்றும் நார்னாபுரம், மேலப்புதூர், லெட்சுமியாபுரம் உள்ளிட்ட கிராமத்தைச் சோ்ந்த சுமார் 50க்கு மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இன்று காலை வழக்கம்போல்  தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது பட்டாசு தயாரிப்பதற்கான மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உராய்வின் காரணமாக பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் தயாரிப்பு அறை முழுவதும் தரைமட்டமானது. தகவலறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைக்கும் பணியிலும், மீட்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த விபத்தில் முருகேசன், சுந்தர்ராஜ் ஆகிய 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த வெடிவிபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

;