திருச்சி ஆட்சியருக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
திருச்சி,ஏப்.13- திருச்சி மாவட்ட முறைசாரா தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை மற்றும் தனிநபர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா,மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கொரோனா தடுப்புப்பணியில் மிக சிரமப்பட்டு உயிரை பணயம் வைத்து அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள், காவல் துறை நண்பர்கள் என திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி வருவதை மனதார பாராட்டுகிறேன். மாநிலத்தின் மையமான திருச்சி மாநகரத்தில் முறைசாரா தொழிலாளர்கள் மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ளனர். நகர மயமாக்கலுக்கு மிக வேகமாக மாறி வருவது திருச்சியாகும். இங்கு ஆட்டோ, சரக்கு வாகனம் சாலையோர வியாபாரிகள், சுமைதூக்கும் தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் என பல்லாயிரம் பேர் அன்றாடங்காய்ச்சிகளாக உள்ளனர் என்பது தாங்கள் அறிந்ததே.
இந்நிலையில் கொரோனா தொற்றுநோய் பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 20 நாட்களை கடந்துள்ள நிலையில் மிகப் பெரிய அளவில் வருமானம் இழந்து " பட்டினிச்சாவை " நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். எனவே அரசு அறிவித்துள்ள அமைப்புசாரா வாரிய உறுப்பினர்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் வழங்குவது என்பது ஏற்புடையதில்லை. திருச்சி மாவட்டத்தில் 20 சதவீத முறைசாரா தொழிலாளர்கள் கூட வாரியத்தில் பதிவு செய்யவில்லை. எனவே நிலைமையை அறிந்து உரிய கணக்கெடுப்பு செய்து பதிவு செய்த தொழிற்சங்க உறுப்பினர் பட்டியல் அடிப்படையிலாவது 1000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் கூட்டுறவு மற்றும் அரசு வங்கிகளில் தகுதி அடிப்படையில் ரூ.20 ஆயிரம் தனிநபர் கடன் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.