மதுரை,ஜூலை 17- மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பழங்காநத்தத்தில் இருக்கிறது நாவலர் சோமசுந்தர பாரதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி. அதற்கான அடிப்படை வசதிகள் கேட்டு, கடந்த டிசம்பர் மாதம் பள்ளியின் ஆசிரியர்கள் பழங்காநத்தம் பகுதிக்குழுத் தோழர்களோடு அலுவலகத்தில் வந்து என்னைச் சந்தித்தனர். தங்களது பள்ளியின்பால் ஆசிரியர்களும் அந்தப் பகுதி தோழர்களும் கொண்டிருந்த ஈடுபாடு அவர்களின் ஒவ்வொரு செயலிலும் தெரிந்தது. நான் பள்ளிக்கு நேரில் வருகிறேன் என்று சொல்லி அனுப்பினேன். ஓரிரு வாரத்தில் பள்ளிக்குச் சென்று பார்த்தேன். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற எனது முயற்சி நிச்சயம் இருக்கும் என்று கூறினேன். அதற்கான செயலிலும் ஈடுபட்டேன்.
அப்பள்ளியில் 10, 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு, தினசரி மாலையில் சிறப்பு பயிற்சி அளிப்பதில் ஆசிரியர்கள் அனைவரும் உணர்வுப்பூர்வமாக ஈடுபட்டதைப் பார்க்க முடிந்தது. வீட்டிலிருந்து காலையில் புறப்பட்டுவரும் குழந்தைகள் மதிய உணவு சாப்பிட்டு, பிற்பகலில் பள்ளி நேரம் முடிந்த பின் சிறப்பு வகுப்பு முடித்து வீட்டுக்கு போய்ச்சேர நெடுநேரமாகும். எனவே சிறப்பு வகுப்புக்கு முன் சத்தான சிற்றுண்டி கொடுத்தால் நன்றாக இருக்குமென்று தலைமை ஆசிரியர் சொன்னார். உடன் ரோட்டரி மிட் டவுன் நண்பர்களை அழைத்து உதவிசெய்யுமாறு கேட்டுக்கொண்டேன். அவர்களும் அதன்பிறகு சுமார் இரண்டு மாத காலம் சிறப்பு வகுப்பில் பங்கெடுத்த மாணவர்கள் அனைவருக்கும் தினசரி மாலை சிற்றுண்டி வழங்கினர். இன்று (ஜூலை 17) காலை பள்ளியின் தலைமை ஆசிரியர் போன் செய்தார். “சார், நேற்று வெளிவந்த 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில், மாநகராட்சி பள்ளிகளில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றது நமது பள்ளி மட்டுந்தான் சார், உங்கள் உதவிக்கு ரெம்ப நன்றி சார்” என்றார். இந்த நன்றிக்குரியவர்கள் உரிய நேரத்தில் தலையிட்டு உதவிசெய்த பழங்காநத்தம் தோழர்களும் ரோட்டரி மிட் டவுன் நண்பர்களும்தான். செயலுக்கான பலன் கிட்டாமல் போவதில்லை. வரும் ஆண்டு மாநகராட்சியின் 12 மேல்நிலைப்பள்ளிகளிலும் இந்த மகிழ்வைக் கொண்டுவர முயற்சிப்போம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.