சென்னை, ஜூன் 12 - தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிங்கார ரத்தினசபாபதி உடல்நலக்குறைவால் வியாழனன்று (ஜூன் 12) காலமானார். தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை உருவாக்கி சுமார் 45 ஆண்டுகள் அதன் பொதுச் செயலாளராக செயல்பட்டவர். மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர்கள் வி.பி.சிந்தன். து.ஜானகி ராமன், எஸ்.பஞ்சரத்தினம், எஸ்.எஸ். சுப்பிரமணியன், கே. விஜயன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர். எம்ஜிஆர் முதல்வராக இருந்தபொழுது மின் ஊழியர்களுக்கு பண்டிகை முன்பணம் மறுக்கப்பட்ட பொழுது மத்திய அமைப்புடன் இணைந்து போராடி தோழர் வி.பி.சிந்தனுடன் கைதாகி சிறையில் இருந்தவர். தொழிற் சங்க உரிமைக்காக வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்த போராளி. அவரது மறைவு பேரிழப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.
அன்னாரது மறைவிற்கு சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே. பத்மநாபன், மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு சிஐடியு மாநில துணைத் தலைவர் கே. கோபிகுமார், மத்திய அமைப்பின் முன்னாள் தலைவர் எஸ்.எஸ். சுப்பிரமணியம், துணைப் பொதுச் செயலாளர் கே.ரவிசந்திரன் உள்ளிட்டோர் மாலைஅணிவித்து அஞ்சலி செலுத்தினர்.