tamilnadu

img

ஊராட்சித் தலைவர் பதவி ரூ.32 லட்சத்துக்கு ஏலம்

தஞ்சாவூர் டிச.12- தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலத்தில் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.  ஒரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை கிழக்கு (கீழையூர்) ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலத்தில் விடப்பட்டதாக புகார் எழுந்தது.  திருமங்கலக்கோட்டை கிழக்கு ஊராட்சி தலைவர் பதவி பெண் (பொது) பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊர்க்கூட்டம் நடத்தி ஊரின் வளர்ச்சிக்கு கூடுதலான தொகை தருபவர்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்பை தருவதற்கு ஏலம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.  இதில் அதிகபட்சமாக 32 இலட்சம் ரூபாய் தருவதாக கூறியவருக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பதவி வழங்க முடிவெடுத்திருப்பதாகவும், முன்பணமாக ரூ 2 லட்சம் பெறப்பட்டு, மீதத்தொகை வரும் டிசம்பர் 15 க்குள் கிராம நிர்வாகிகளிடம் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் பரவியது. மேலும் போட்டியில் இருந்து மூவர் விலகிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து உள்ளாட்சி அதிகாரிகள், தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தினர்.  இதுகுறித்து ஒரத்தநாடு வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி யிடம் கேட்ட போது, “பணத்திற்கு ஏலம் விடப்பட்டதாக தெரியவில்லை. ஊர்மக்கள் ஒன்றுகூடி ஒருமனதாக தேர்வு செய்ததாகக் கூறினர். இருந்தும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.