கடந்த 6 மாத காலத்தில் அரசின் நேரடி வரி வருவாய் வெறும் 4.7 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டில் பொருளாதார மந்த நிலை காரணமாக ஆட்டோமொபைல் உள்ளிட்ட தொழிற்துறைகளின் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் வேலை இழப்பு அதிகரித்து வருகிறது. அதேபோல், நுகர்வு பொருட்களின் விற்பனையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தற்போது அரசுக்கு வரும் வரி வருவாய் பெரிய அளவில் வளர்ச்சி காணவில்லை என செய்திகள் வெளியாகி வருகின்றன. நடப்பு 2019-20 நிதியாண்டின், ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் 15 வரையான காலகட்டத்தில் அரசுக்கு கிடைத்து இருக்கும் நேரடி வரி வருவாய் வெறும் 4.7 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 6 மாத காலத்தில், மத்திய அரசின் நேரடி வரி வருவாய் வெறும் 4.4 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில், மக்களுக்கு கொடுக்க வேண்டிய ரீஃபண்ட் தொகை மட்டும் 1 லட்சம் கோடி ரூபாய் இருக்கிறது.
இந்நிலையில், 2019-20 நிதியாண்டில் மீதம் இருக்கும் ஆறு மாத காலத்துக்குள் சுமார் 9.1 லட்சம் கோடி ரூபாய் நேரடி வரியை வசூலித்தால் தான், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது போல, 2019-20 நிதி ஆண்டுக்குள் 13.5 லட்சம் கோடி ரூபாயைத் திரட்ட முடியும் என பொருளாதாரம் சார்ந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.
மேலும், இந்தியப் பொருளாதார மந்த நிலை, வரி வசூலில் நேரடியாக எதிரொலித்துக் கொண்டு இருப்பதாகப் வருமான வரித் துறை வட்டாரங்கள் கூறுகின்றனர். இந்நிலையில், எதிர் பார்த்த அளவுக்கு வரி வருவாய் இல்லாமல் போனால், நிதிப் பற்றாக்குறை, ஜிஎஸ்டி வரி விகிதம் அதிகரிப்பு, வழக்கம் போல சந்தையை ஊக்குவிக்க அரசால் எதையும் செய்ய முடியாத நிலை ஏற்படலாம்.