tamilnadu

img

கொந்தகையில் முதலாம் கட்ட ஆய்வு

அமர்ந்த நிலையில்  மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

கொந்தகை, மார்ச் 21- சிவகங்கை மாவட்டம் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து கட்ட அகழாய்வில் ஆயிரக்கணக்கான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆறாம் கட்ட அகழாய்வு தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஆறாம் கட்ட ஆய்வு கீழடியைத் தொடர்ந்து கொந்தகையிலும், மணலூரிலும் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் கீழடியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொந்தகையில் உள்ள கால்நடை மருந்தகம் அருகே நடைபெற்றுவரும் முதலாம் கட்ட அகழாய்வில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் அமர்ந்த நிலையிலான எலும்புக்கூடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலை எட்டுமணி முதல் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் பாலகிருஷ்ணன், ஓய்வுபெற்ற மானுடவியல் பேராசிரியர் பிச்சப்பன், பாண்டிச்சேரி பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர் ராஜன், தமிழக தொல்லியல் துறை உதவி இயக்குனர் சிவானந்தம் மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள் ஆசைத்தம்பி, பாஸ்கரன் ஆகியோர் இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து துணைவேந்தர் கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கீழடி ஆறாம் கட்ட அகழாய்வின் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கொந்தகை ஈமக்காடு அகழாய்வில், விரிவான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் பங்கேற்றுள்ளனர். இங்கு கிடைக்கப்பெற்ற முதுமக்கள் தாழிகளில் உள்ள எலும்புகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளன. கொந்தகை ஈமக் காட்டில் முதல்நிலை தரவுகளும் இரண்டாம்நிலை தரவுகளும் கிடைத்து வருகின்றன. அதில் குறிப்பாக முதல் நிலை தரவுகளில் அமர்ந்த நிலையில் உள்ள எலும்புக்கூடு ஒன்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.  சனிக்கிழமை கண்டறி

சனிக்கிழமை கண்டறியப்பட்ட (First Burial) புதைக்கப்பட்ட ஒரு மனிதனின் இரண்டு கைகள், கால்கள் தற்போது வெளியே தெரியத் தொடங்கியுள்ளன. புதைக்கப்பட்ட மனிதனின் முழு உருவமும் கிடைக்கப்பெற வாய்ப்புள்ளது. அதன் முழுமையான வடிவம் கிடைத்த பிறகு அது குறித்த காலக் கணக்குகளை உரிய ஆய்விற்குப் பிறகு வெளியிட இருக்கிறோம். இங்குள்ள ஆய்வாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தற்போது கை, கால்கள்   எலும்புகள் கண்டறியப்பட்ட மனிதனின் முழுத்தோற்றத்தையும் வெளியே எடுக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இங்கு எடுக்கப்படும் எலும்புகள் அனைத்தும் மூலக்கூறு ஆய்விற்கு அனுப்பப்பட்டு அதன் முடிவுகளை தமிழக தொல்லியல் துறையின் ஒப்புதலோடு விரைவில் மதுரை காமராசர் பல்கலைக் கழகம் வெளியிடும் என்றார். மேலும் ஹரியானா மாநிலம் ராக்கிகரியில் கிடைத்த எலும்புக் கூட்டை ஒத்த படிமங்கள் இங்கே கிடைக்குமா என்பதை இப்போது உறுதி செய்ய முடியாது. ஆனால் அதற்கான ஆய்வுகள் மிக விரிவாக நடைபெற்று வருகின்றன என்றார்.

(Second Burial) வேறெங்கோ புதைக்கப்பட்டவர்களை தோண்டியெடுத்து கொந்தகை ஈமக்காட்டில் புதைத்ததற்கான சாத்தியக்கூறுகள் இருக்கக்கூடும். அதனடிப்படையில் ஒரு முதுமக்கள் தாழியில் ஆய்வு நடைபெறுகிறது. இதிலும் எலும்புகள் கிடைக்கும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். கொந்தகை ஈமக்காட்டியில் ஒரு குறிப்பிட்ட  தூரத்தில் சுமார் எட்டு முதுமக்கள் தாழிகள் உள்ளன. அதனூடே சிறிய சிறிய பானைகளும் உள்ளன. சனிக்கிழமை கண்டறிப்பட்ட கை, கால் எலும்புகளுடன் இறந்த மனிதனின் காதின் இருபுறமும் சிறிய பானைகள் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளன. இதில் இறந்தவர் விரும்பிச் சாப்பிட்ட உணவாக இருக்கலாம். அல்லது அவர் விரும்பி அணிந்த அணிகலன்களாகக் கூட இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கீழடியிலும் ஆய்வு தொடர்கிறது அங்கு செங்கற்களால் ஆன சுவர் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.