ஹைதராபாத், ஜூலை 28 - காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயபால் ரெட்டி ஞாயிறு (ஜூலை 28) அதிகாலை 1.28 மணிக்கு ஹைதரா பாத்தில் காலமானார். அவருக்கு வயது 77. நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. 1984ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வந்த ஜெயபால் ரெட்டி பல்வேறு அரசுகளில் அமைச்சர் பதவிகளையும் வகித்துள்ளார். ஐ.கே.குஜ்ரால் பிரதமராக இருந்தபோது ஜெயபால் ரெட்டி தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராக பதவி வகித்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஆட்சியின்போது நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, கலாச்சாரம் ஆகிய துறைகளுக்கு அமைச்சராக பதவி வகித்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சியில் மீண்டும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பூகோளவியல் அமைச்சராக பதவி வகித்தார். ஜெயபால் ரெட்டியின் இறுதிச் சடங்கு திங்களன்று (ஜூலை 29) நடைபெறும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உட்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். வெங்கய்யா நாயுடு ஜெயபால் ரெட்டிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.