நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் சிரமப்படும் நிலையில், தற்போது மும்பை பெரும் மழை மற்றும் சூறாவளி காற்றினை எதிர்கொண்டுள்ளது. தென் மும்பையின் கொலாபா பகுதியை பலத்த மழை பதம்பார்த்துள்ளது. சுமார் 46 ஆண்டுகளில் இல்லாத அளவு மழையின் அளவு அதிகரித்துள்ளது. மழையுடன் சூறாவளி காற்று 107 கிமீ வேகத்தில் நகரத்தை தாக்கி சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக புறநகர் ரயில் மற்றும் பஸ் சேவைகள் முடக்கியுள்ளன.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டிருந்தன. அடுத்த சில மணிநேரங்களில் அதிக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே அறிவுறுத்தியுள்ளார்.
மும்பையின் கொலாபா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 331.8 மிமீ அளவு மழை கொட்டி தீர்த்துள்ளது. இம்மாதத்தின் மொத்த மழை பொழிவில் 64 சதவிகிதம் முதல் ஐந்து நாட்களிலேயே கொட்டி தீர்த்துள்ளது. இதன் காரணமாக தென் மும்பை பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக மக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்றும், மும்பையின் குடிமை அமைப்பு அதிகாரிகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் மாநில முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் நகரத்தில் மழையின் தீவிரம் படிப்படியாகக் குறையக்கூடும் என வானிலை ஆய்வு இயக்குநர் கே.எஸ். ஹோசலிகர் கூறியுள்ளார்.