மத்திய பிரதேசத்தில் நடந்த தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப்பிரதேசத்தின் குவாலியர் நகரில் உள்ள ஒரு பெயிண்ட் கடையில் நேற்று எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது. அப்போது தீ பெயிண்ட் டப்பாக்களில் பரவியதால் கடையில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினர். கடையின் மாடியில் கடை உரிமையாளரின் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
இந்த தீ விபத்தில் அவர்கள் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் தீ மாடியில் உள்ள வீட்டுக்கும் பரவியதில், அங்கிருந்த 4 குழந்தைகள், 3 பெண்கள் என 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.