மும்பை, ஏப்.6- நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் 571 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், மும்பை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மும்பையில் உள்ள பிரபல ஒக்கார்ட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்தில் 26 செவிலியர்கள், மூன்று மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. எனவே அந்த மருத்துவமனைக்குள் செல்லவோ அல்லது மருத்துவமனையில் இருந்து வெளியே செல்லவோ யாருக்கும் அனுமதி இல்லை.
கொரோனா உறுதி செய்யப்பட ஒவ்வொருவருக்கும் அடுத்தடுத்து இருபரிசோதனைகள் நடத்தப்படும். இதில் தொற்று இல்லை எனத் தெரியும்வரை இந்த தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனை நிர்வாகம் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக கடைப்பிடிக்கவில்லை. இதனால் மருத்துவமனைப் பணியாளர்கள் 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுபற்றி மும்பை மாநகராட்சி கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சுரேஷ் ககானி கூறுகையில், மருத்துவமனையில் இவ்வளவு பேருக்கு எப்படி வைரஸ் தொற்று பரவியது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.