tamilnadu

தமிழே சிறந்திருக்கும் - கோவி.பால.முருகு

அமிழ்தாம் தமிழைப் போற்றிடுவாய்
 அதனின் சுவையை ஏற்றிடுவாய்!
தமிழின் இலக்கியம் கற்றிடுவாய் 
 தந்திடும் இலக்கணம் ஏற்றிடுவாய்!

பாட்டும் தொகையும் சிறந்துநிற்கும்
 பதினெண் கீழ்க்கணக் கொளிர்ந்துநிற்கும்!
காட்டும் காப்பியம் நிமிர்ந்துநிற்கும்
 கருத்தில் ஐந்தாய் அமைந்திருக்கும்! 

இதிகா சங்கள் இரண்டிருக்கும்
 இராமா யணமும் அதிலிருக்கும் 
சூதின் பாரதக் கதையிருக்கும் 
 சூழ்ச்சியின் வேரே அதிலிருக்கும் ! 

கதையாய்ப் படித்து சுவைத்திடலாம்
 கருத்தில் கொள்வதை விடுத்திடலாம்!
விதையாய் அவற்றைக் கொள்ளாதே
 விலக்கிட நாடு பதைக்காதே!

ஒல்காப் புகழ்தொல் காப்பியமாம்
 உயர்ந்த இலக்கணச் சூத்திரமாம்! 
அள்ளக் குறையா நன்னூலாம்
 அளித்திடும் இலக்கணத் தொன்னூலாம்!

பாவை கற்றிடக் காரிகையாம்
 பழகிடும் நல்ல தூரிகையாம்!
தேவை தண்டிய லங்காரமாம்
 திகட்டா அணியின் ஓங்காரமாம்!

பன்னிரு திருமுறை சிறந்திருக்கும்
 படித்திட சிற்றிலக் கியமிருக்கும்!
இன்புறப் படித்திட அவையிருக்கும்
 எண்ணிடத் தமிழே சிறந்திருக்கும்!