நேற்று எனது அரசியல் கடமையை ஆற்ற தூத்துக்குடி பயணம். பஸ்ஸில் தான். வழக்கம் போல் ஒரு சிறு கதை தொகுப்பு நூலை எடுத்துச் சென்றேன். அது “கைரதி 377”. மு. ஆனந்தன் எழுதியது. பயணத்தில் எடுத்து வாசிக்கத் துவங்கி னேன். நாகர்கோயில் திரும்பி வருவதற்குள் வாசித்து முடித்தேன். வாசிப்பி னால் ஏற்பட்ட வலி இது வரை அகலவில்லை . அட்டை யில் ஆசிரியர் குறிப்பிட்டது போல் மாறிய பாலினரின் மாறாத வலிகள் என்னையும் பற்றி விட்டது.
மூன்றாம் பாலினத்தவரை ஒவ்வொரு ரயில் பயணத்தின் போதும் சந்திக்கிறோம். அது குறித்து சிந்திப்ப தில்லை. அவர்களுடன் உரையாடியதும் இல்லை. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மூன்றாம் பாலின சகோதரியின் தன் கதை (சுயசரிதை) ஒரு பயணத்தின் போது வாசித்துள்ளேன். தற்போதைய வாசிப்பு கைரதி 377 நூல் மூன்றாம் பாலினத்தவரின் பல பரி மாணங்களையும் வலிகளையும் வெளிப்படுத்துகிறது. முதல் கதை “ ஓலையக்கா லாக்கப்”. ஓலையக்கா கும்மியடிக்க ஆசைப்பட்டு கும்மி ஆடும் காளிச்சாமி. அக்காவின் பாவாடையையும் சோளியையும் அணிந்து ஆடும் அவனுள் இருக்கும் பெண்மை. இதில் ஓலையக்கா குறித்த கதை. ஓலையக்கா ஒரு குறியீடு. காவல்துறையினரின் தலையீடு, மிரட்டல், துகிலுரித்துப் பார்ப்பதற்கான முயற்சி. ஓலையக்கா போல் தீக்கன லுக்கு இரையாகும் அவலம். இரண்டாவது கதை “ இதரர்கள்”. புகழ் பெற்ற டில்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் மேல் படிப்புக்கு அட்மிஷன் கிடைத்து அங்கு செல்கிறார் இடைப்பாலின வகைமையைச் சார்ந்த கைரதி கிருஷ்ணன். அங்கு விண்ணப்ப படிவத்தில் பாலினம் என்பதில் ஆண்/பெண் மட்டுமே குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டி லும் உடன்பாடில்லாத கைரதி கிருஷ்ணன் அப்பிரச்ச னைக்குத் தீர்வு காண மாணவர் பேரவை தலைவர் அஹ்மதைச் சந்திக்கிறார். பிரச்சனையைப் புரிந்த மாணவர் பேரவை நிர்வாகிகள் பல்கலைக்கழக நிர்வாகி களை அணுகுகின்றனர். புரிய மறுக்கும் நிர்வாகம். தொட ரும் போராட்டங்கள். பிரச்சனைக்குத் தீர்வுடன் மாணவர் தலைவர்கள் மீது தேச துரோக வழக்கும் வருகிறது.
அடுத்த கதை “கூடுதலாய் ஒரு நாப்கின்”. முதுகலை கல்வி பயிலும் பூர்விகா. திடீரென நாப்கின் தேவை ஏற்படுகிறது. தேடுகிறாள் வாங்கி வைத்த நாப்கினை காணவில்லை. வீட்டில் சமையல் வேலை செய்யும் கைரதி மீது சந்தேகம். பெண்களின் உடைகளை அணிவதில் ஆர்வம் காட்டும் பாலினர் கைரதி. அதனால் ஏற்படும் பிரச்சனைகள். கைரதியைப் புரிந்து கொண்டு கூடுதல் நாப்கின் வாங்கி வைக்கும் பூர்விகா. அடுத்தது “ஜாட்ளா”. மூன்றாம் பாலினர் அரசு உதவிக்காக மருத்துவ சான்றிதழ் பெற அலைக்கழிக்கப் படுகிற அவமானப்படுகிற நிகழ்வு. அடுத்த கதை “நஸ்ரியா ஒரு வேஷக்காரி”. ஆண் தன்மை பெற்ற பெண் இஞ்சினியர் நஸ்ரியா ஆண்களைப் போல் உடையணிந்து கடின வேலையைத் தேர்வு செய்யும் கதை. அடுத்த கதை “அழகன் என்கிற போர்க்குதிரை” ஒரு திருநங்கையின் அழகான காதல் கதை. “377 ம் பிரிவின் கீழ் கைரதி” என்ற கதையில் கைரதியைப் பிடித்துச் சென்று காவல்நிலையத்தில் வைத்து இயற்கைக்கு மாறானக் கூட்டு பாலியல் புணர்வு செய்த காவல்துறை யினர் அந்தக் கைரதி மீதே இயற்கைக்கு மாறான பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கிக் கொடுத்த கொடுமை.
“அடையாளங்களின் அவஸ்தை” எனும் கதை, மூன்றாம் பாலினருக்கு லாட்ஜில் ரூம் கிடைப்பதிலும், இயற்கை உபாதைகள் கழிப்பதற்குக் கூட ஏற்படும் சிக்கல்களையும் பேசுகிறது. “மாத்தாராணி கிளினிக்” பெண்ணாக மாறிய மருத்துவரான மகனை கைவிட்ட பெற்றோர், வேலையை விட்டுத் தூக்கிய நிர்வாகம். உண்மையைப் புரிந்து உதவும் காவல்துறை பெண் ஆய்வாளர் என நேர்மறை அணுகுமுறையையும் காட்டுகிறது. கடைசிக் கதை “பாவ சங்கீர்த்தனம்” கத்தோலிக்கத் திருச்சபையில் அருட்பணியாளர் பயிற்சி பெற்று வரும் நிலையில், பாலின மாற்ற உணர்வில் சிக்குண்டவர் குறித்தது. பெண்களையே மதம் சார்ந்த பணிகளில் அனுமதிக்க மறுக்கும் மதங்கள் மூன்றாம் பாலினரை அனுமதிக்குமா? . பொதுவாக மூன்றாம் பாலினர் நிலைமைகளைப் புரிந்து கொள்ள உதவும் சமூக அக்கரை கொண்ட கதை களைத் தந்த ஆசிரியர் ஆனந்தனை எவ்வளவு பாராட்டி னாலும் தகும். பாரதி புத்தகாலய வெளியீடு. வாங்கி வாசித்து அவர்களையும் அறிந்து கொள்வீர். சமூகப் புறக்கணிப்புக்கும் கடும் பிரச்சனைகளுக்கும் உள்ளாக்கப்படும் மூன்றாம் பாலினரின் பிரச்சனை களைப் புரியவும், அவர்களுக்கான கோரிக்கை களைக் கேட்டறிந்து தீர்வுகளுக்கான முன்னெடுப்பு களுக்காகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவர்களின் கலந்தாய்வு கூட்டம் ஒன்றை கடந்த நவம்பர் மாதம் விழுப்புரத்தில் நடத்தியிருப்பது பொருத்தமானதே.
கைரதி 377
சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர்: மு.ஆனந்தன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 120; விலை: ரூ.120/-