tamilnadu

img

எழுத்தாளர் கி. ராஜநாராயணன் சிலையை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்

கோவில்பட்டி, டிச. 2 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ளியன்று தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் தூத்துக்குடி  மாவட்டம், கோவில்பட்டியில்   கரிசல் காட்டு இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களின் முழு உருவச் சிலையுடன் கூடிய நினைவரங்கத்தை காணொ  லிக் காட்சி வாயிலாகதிறந்துவைத்தார். எழுத்தாளர் கி.ராஜநாராயணன்  தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டில் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தில்  ஸ்ரீகிருஷ்ண இராமனுஜம் -லட்சுமி அம்மாள் தம்பதியருக்கு மக னாக 16.9.1922 அன்று பிறந்தார். பள்ளிப் பருவ கல்வியை மட்டுமே முடித்திருந்த கி.ராஜநாராயணன்  பேச்சுத்தமி ழில் மண்மணமிக்க சிறுகதை களை படைத்தார். அவரது படைப்பு களில் கரிசல் நிலவியலும், வெள்ளந்தித் தனமும், பேரன்புமிக்க மக்களின் வாழ்வும் இடம்பெற்றிருந்தன. கி.ராஜநாராயணன்  கரிசல் வட்டார அகராதியை உருவாக்கிய முன்னோடி யாக திகழ்ந்தார். கரிசல் கதைகள், கதவு, பெண் கதைகள், கிராமியக் கதைகள் போன்ற எண்ணற்ற சிறுகதை களையும், கிடை, பிஞ்சுகள் போன்ற குறுநாவல்களையும், கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், அந்த மான் நாயக்கர் போன்ற நாவல்களை யும், எண்ணற்ற கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார். 1991-ஆம் ஆண்டு “கோபல்லபுரத்து மக்கள்” என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார்.

கி.ராஜநாராயணனுக்கு இலக்கிய சிந்தனை விருது, தமிழ்நாடு அரசின் விருது, மனோன்மணியம் சுந்தரனார் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய  இலக்கிய விருதுகள் வழங்கப் பட்டுள்ளன. தமிழ் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நாவல்கள் மூலம் எண்ணற்றோர் இதயங்களில் வாழும் கி.ராஜநாராயணன் 17.05.2021 அன்று மறைந்தார்.  தமிழ் இலக்கியத்திற்குச் செழுமை சேர்த்த கரிசல்காட்டு எழுத்தாளர் கி.  ராஜநாராயணன் (கி.ரா.)  நினைவி னைப் போற்றும் வகையில், அவர் படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்றும், அவரது படைப்பாளுமையை வெளிப்படுத்தும் வகையிலும், அவருடைய புகைப்படங்கள், படை ப்புகள் ஆகியவற்றை மாணவர்களும், பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையிலும் ஓர் அரங்கம் நிறுவப்படும் என்றும், கரிசல் இலக்கியத்தை உலகறியச் செய்த பிதாமகர் கி.ரா. அவர்களுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என்றும் 18.5.2021 அன்று  தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், இடைசெவல் ஊராட்சியில், கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி. ராஜ நாராயணன் அவர்களின் நினைவாக அவர் பயின்ற இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கட்டடம் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழமை  மாறாமல் புதுப்பிக்கப்பட்டு முதலமைச்சரால் 11.10.2022 அன்று திறந்து வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கோவில் பட்டியில், 220 சதுர மீட்டர் பரப்பளவில் 1 கோடியே 50 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முழு  திருவுருவச் சிலையுடன் கூடிய நினை வரங்கத்தை  தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் வெள்ளியன்று திறந்து வைத்தார். இந்நினைவரங்கத்  தில் நூலகம், நிர்வாக அலுவலகம்,  மின்னணு நூலகம், கண்காட்சி அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து  செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) முனைவர் ம.சு. சண்முகம், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர்  வீ.ப. ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர். கோவில்பட்டியிலிருந்து காணொ லிக் காட்சி வாயிலாக  சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர்  பி. கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர்  வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. கி. செந்தில்ராஜ்,  எழுத்தாளர் கி.ரா.அவர்களின் மகன்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

;