மனோரா கடற்கரையில் உலக கடல் ஆமைகள் தின விழிப்புணர்வு
தஞ்சாவூர், மே 25- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மனோரா கடற்கரையில், தஞ்சாவூர் வனக்கோட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகத்தின் சார்பில், மாவட்ட வன அலுவலர் மா.ஆனந்தகுமார் அறிவுறுத்தலின் பேரில், உலக கடல் ஆமைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ். சந்திரசேகரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கடல் ஆமைகள், கடல் வாழ் உயிரினங்களின் முக்கியத்துவம் மற்றும் கடல் வளத்தினை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து மீனவர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, மீனவர்களுடன் இணைந்து, “கடல் வளத்தை பாதுகாப்போம். கடல்வாழ் உயிரினங்களை பெருக்குவோம்’’ என உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், மீனவர்களுக்கு இனிப்பு வழங்கி, கடல் ஆமைகள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் பட்டுக்கோட்டை வனவர் சிவசங்கரன் மற்றும் வேட்டை தடுப்புக் காவலர்கள், வனத்துறையினர், மீனவர் சங்க பிரதிநிதிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.