tamilnadu

img

உழைக்கும் வர்க்கப் போராளி தோழர் ஏ.ஆர்.கே - களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள்

உழைக்கும் வர்க்கப் போராளி தோழர் ஏ.ஆர்.கே

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் கோவைக் கோட்டம் பிரிக்கப்பட்டு கோழிக்கோடு கோட்டம் உருவாக்கப்பட்டது. கேரளத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பலரும் புதிய கோட்டத்தின் கிளைகளுக்குச் சென்றனர். கோவையிலேயே பணியாற்ற விரும்பியவர்களை கேரளத்திற்குச் சென்றுவிட வேண்டும் என்று ஒரு பகுதியினர் வற்புறுத்தினர். எங்கே பணியாற்றுவது என்பதை அவரவர் விருப்பத்திற்கு விட்டுவிட வேண்டும் என்று ஊழியர் சங்கம் முடிவு செய்தது. அதற்காக அவர் அச்சுறுத்தப்பட்டார். குடும்பத்தினர் மிரட்டப்பட்டார்கள். ஊழியர்களின் ஆதரவோடு அந்த மிரட்டல்களை முறியடித்து விருப்பப்படி கோட்டத்தைத் தேர்வு செய்யும் உரிமையை  உறுதிப்படுத்தியவர்தான்  “ஏஆர்கே”  என்றழைக்கப் படும் தோழர் ஏ.ஆர். கல்யாணசுந்தரம். 1937இல் பாலக்காடு மாவட்டம் ஆலம்பள்ளம் கிராமத்தில் பிறந்தவர் கல்யாணசுந்தரம். தந்தை  பள்ளி ஆசிரியராக சிறிது காலம் பணியாற்றிய வரானாலும் நடுத்தர விவசாயக் குடும்பம். இரண்டு அண்ணன்கள், இரண்டு தம்பிகள். 1957 தேர் வில் தேர்ச்சி பெற்று எல்ஐசியின்  எர்ணாகுளம் கிளையில் சேர்ந்தார். உடனே அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் (ஏஐஐஇஏ) உறுப்பின ரானார். கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத் தலை வராகத் துடிப்புடன் செயல்பட்டதை அறிந்திருந்த சக ஊழியர்கள் தகுதிகாண் காலத்திலேயே இவரை, சங்கத்தின் கிளைச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தனர். கனவும் பாதையும் வேலையில் சேர்ந்தபோது நிறுவனத்தின் மேலாளராகத்தான் பணி ஓய்வு பெற வேண்டும் என எண்ணியிருந்தவரின் பாதை சங்கப் பொறுப்புக்கு மாறியது. 1961இல் கோவைக்கு மாற்ற லாகி வந்தவரை சங்க உறுப்பினர்கள் கோட்டச் செயற்குழுவிற்குத் தேர்வு செய்தார்கள். அடுத்த ஆறாவது மாதம் நடைபெற்ற மாநாட்டில் இணைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது எல்ஐசியின் கோவை கோட்டம் ஓசூர், ஈரோடு, சேலம்,  கோழிக்கோடு, எர்ணாகுளம், கண்ணூர், ஆலப்புழா  உள்ளடங்கிய பிரிவாக இருந்தது. கோட்டப் பொதுச்செயலாளராக இருந்தவர் பணி மாற்றமாக கேரளம் சென்றார். ஏஆர்கே அந்தப் பொறுப்பை ஏற்கத் தோழர்கள் விரும்பினர். தயங்கிய ஏஆர்கே ஒரு வாரம் விடுப்பு எடுத்து கிராமத்திற்கு சென்றுவிட்டார்; என்றாலும், ஊழி யர்கள் விடாப்பிடியாக வலியுறுத்தியதால் ஏற்றார். சங்கப் பொறுப்பு அவரை தேடிவந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு குறிப்பிட்ட பிரச்சனையில் ஊழியர் ஒரு வரைப் பழிவாங்குவதற்காக மேலாளர் இடமாற்றம் செய்ததுடன், 24 மணி நேரத்திற்குள் புதிய பணியிடத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்று ஆணையிட்டார். மேலாளரைச் சந்தித்த ஏஆர்கே அந்த நடவடிக்கையை விலக்கிக்கொள்ள வலி யுறுத்தினார். மேலாளர் எடுத்த முடிவு சரிதானென்று  சங்கத்தின் கோட்டத் தலைவர் வாதிட்டார். ஏஆர்கே சங்க உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி, நிர்வாகம் அந்த இட மாற்ற உத்தரவை விலக்கிக்கொள்ள வேண்டுமென்ற தீர்மானத்தை நிறைவேற்றச் செய்து மேலாளரிடம் அளித்தார். மேலாளரோ ஆத்திரத்தோடு மேலும் 10 ஊழியர்களை இட மாற்றம் செய்தார். மேலாளர், சங்கத் தலைவரை தன்னோடு சேர்த்துக் கொண்டு ஊழியர்கள் மீது தாக்குதல் தொடுத்தார். ஊழியர்களிடையே பதற்றம் ஏற்பட்டது. உணர்ச்சிப் பிழம்பான ஏர்ஆர்கே சங்கத்தின் விரிவான பொதுக்குழுவைக் கூட்டி பழிவாங்கும் நட வடிக்கையை நிர்வாகம் விலக்கக் கோரும் தீர் மானத்தை முன்மொழிந்தார். பொதுக்குழுவில் கலந்து கொண்ட தலைவர், இடமாற்றம் என்பது நிர்வாகத்தின் அதிகாரங்களில் ஒன்று என்று கூறி ஏஆர்கே முன்மொழிந்த தீர்மானத்தை எதிர்த்து ஒரு மணி நேரம் பேசி, தனது கருத்தை பொதுக்குழு ஏற்கவில்லையென்றால்,  பொறுப்பிலிருந்து விலகு வதாகக் கூறி விலகல் கடிதத்தையும் முன்வைத்தார் மீண்டும் பொதுச் செயலாளர் ஏஆர்கே ஒரு மணி நேரம் பேசினார். இடமாற்றம் என்ற அதிகாரத்தை நிர்வாகம் ஊழியர்களை பழிவாங்கிட பயன்படுத்த அனுமதிக்க முடியாது என தீர்மானத்தின் நியா யத்தை எடுத்துரைத்தார். வாக்கெடுப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலைவரின் விலகல் கடி தத்தை பொதுக்குழு ஏகமனதாக ஏற்றதைத் தொடர்ந்து அவர் வெளிநடப்புச் செய்தார். நிர்வாகம்  பணிந்தது. ஊழியர்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன. நிர்வாகத்தின் பழிவாங்கும் நட வடிக்கையை எதிர்த்து உறுதியாக நின்ற தோழரின் மீது ஊழியர்களின்  நம்பிக்கை பன்மடங்காகியது. தலைமையில் இருந்த ஒருசிலரின் சமரசவாத போக்குக்கு எதிராக போராடி போர்க்குணமிக்க சங்க மாக வார்த்தெடுத்ததில் இவரது பங்கு முக்கியமானது.  கணினிமயமாக்கலை எதிர்த்து எல்ஐசிக்குள் கணினிகளை புகுத்தி ஆட் குறைப்பு செய்ய இந்திராகாந்தி அரசு முயன்றதை எதிர்த்து மூன்றாண்டு காலம் (1966–68) ஊழியர் கள் நாடு முழுதும் போராடினார்கள்.  கோவையில் ஏஆர்கே முன்முயற்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின்  தலைவர்களில் ஒருவரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் ஏ.கே. கோபாலன் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் நடை பெற்றது. ஊழியர்களோடு பல்லாயிரக்கணக்கான உழைக்கும் மக்கள் கலந்துகொண்ட பொதுக் கூட்டமாக அமைந்தது. அதன் பிறகு திமுக தலைவர்கள் அண்ணா, மதியழகன் கலந்து கொண்ட கூட்டமும் நடைபெற்றது. கொல்கத்தா போராட்டத்தில் தோழர் ஜோதிபாசு  பங்கேற்றார்.  நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நடந்த ஒன்று பட்ட போராட்டத்தை எதிர்த்து நிற்க முடியாத  நிர்வாகம் தனது முடிவை திரும்பப் பெற்றது. பின்னர் சில ஆண்டுகளில் ஊழியர்களின் உழைப்பு டன் எல்ஐசி சேவைகள் விரிவடைந்ததையொட்டி தேவையையொட்டி, சங்கத்துடன் கலந்தாலோ சித்து, கணினிகளைப் பயன்படுத்தலாம் என ஒப்பந்தமானது. பிற துறைகளின் உழைப்பாளிகள் கவனத்தையும் பெற்ற போராட்டம் அது. இந்தப் பின்னணியில் ஏஐஐஇஏ அகில இந்திய செயற்குழு உறுப்பினராக ஏஆர்கே தேர்வு செய்யப்பட்டார். 1970களில் முறைப்படியான ஊதிய உயர்வு கோரிக்கையை நிர்வாகம் ஏற்க மறுத்தபோது, வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன. ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தைக் குழுவில்  ஏஆர்கே இடம்பெற்று தில்லி சென்றார்.  1975 அவசரநிலை ஆட்சியின் தாக்கம் எல்ஐசியிலும் இருந்தது.  ஊழியர்கள் வசிக்கும் பகுதிகளில் சங்கப் பேரவைக் கூட்டங்களை நடத்தியதாக தோழர் ஏஆர்கே கூறினார். இரண்டு முறை அகில இந்திய செயற்குழுவும் அக்காலத்தில் நடத்தப்பட்டது. அன்றைய தென் மண்டல தலைவராக இருந்த இரா. செழியன் அவசரநிலை ஆட்சிக் காலத்தில் சென்னையில் அகில இந்திய செயற்குழு கூட்டம் வெற்றிகரமாகக் கூட்டப்பட்டதை வியந்து பாராட்டினார். நாடுதழுவிய இயக்கத்தின் ஒரு பகுதியாக கோவை கோட்டத்தில் ஒன்றிய அரசு மற்றும் நிர்வாகத்தின் ஊழியர் விரோதப் போக்குகளை எதிர்த்தும் தொடர்ச்சியாக பல இயக்கங்கள் நடந்தன. அவற்றில் ஊழியர்கள் துணிவோடு பங்கேற்றனர். இந்தப் பின்னணியில் கோவையில் 1974ஆம் ஆண்டு ஏஆர்கே, மாதவன் உள்ளிட்ட நான்கு தோழர்களைக் கொண்ட எல்ஐசி அரங்கக் கட்சிக் கிளை உருவானது. செயலாளராக கிருஷ்ணமாச்சாரி தேர்வானார். மற்ற தொழிலாளர்களோடும் தோழர் ஏஆர்கே எல்ஐசி ஊழியர்களிடையே மட்டுமல்லாமல் மாவட்ட அளவில், பிற தொழி லாளர்களுக்கான இயக்கங்களிலும் பங்கேற்றார். இவருடைய தொழிற்சங்கப் பணிக்கும், கட்சி ஈடுபாட்டிற்குமான அங்கீகாரமாக 1990ல் கட்சியின் கோவை மாவட்ட குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இப்பொறுப்பில் 2010 வரை இயங்கினார். எல்ஐசி கோவை கோட்டத்தில் பொதுச் செயலாள ராக, தலைவராக செயல்பட்ட தோழர் ஏஆர்கே பணி ஓய்வு பெறும் வரை அப்பொறுப்பை நிறை வேற்றினார். ஓய்வுக்குப் பிறகும்  கோவை மண்டல பொதுக் காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் தலைவராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். தொழிற்சங்கத்திற்கு வெளியே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ரத்ததான கழகத்தின் சிறப்புத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். சடங்கு செய்யாவிட்டால்… ஏஆர்கேயின் தாயார் இவருடன்தான் வசித்தார். தொடர்ந்து ‘தீக்கதிர்’ வாசித்து வந்தவர்  அவர். தேர்தலின் போது எந்தக் கட்சிக்கு வாக்க ளிப்பீர்கள் என்று யாராவது கேட்டால், “என் மகன் கட்சிதான் என்னுடையது” என்று அழுத்தமாகக் கூறுவார். கடவுள் மீதும் சடங்குகளிலும் நம்பிக்கை  கொண்டவரான தாயாருடன் ஒருநாள் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்த ஏஆர்கே, “நீங்கள் இறந்த பிறகு நான் சடங்குகளெல்லாம் செய்ய மாட்டேன். சடங்குகளைச் செய்யாவிட்டால் நீங்கள் ஆவியாக வந்து அடிப்பீர்களாமே,” என்று கேட்டிருக்கிறார். அவரது கையை பிடித்துக் கொண்ட தாயார், “நான் உயிரோடு இருக்கும்போது என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறாய். இறந்த  பிறகு எனக்கு நீ எந்தச் சடங்கும் செய்ய வேண்டாம்.  ஒரு மண்ணும் நடக்காது” என்று  உறுதிபடக் கூறியிருக்கிறார். 1965-இல் ஏஆர்கே–பார்வதி திருமணம் நடை பெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள்.  இவர்கள் ஏஆர்கேயின் இயக்கப் பணிக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள். அண்மையில், கோவை கோட்ட சங்கத் தலைவர்களில் ஒருவரான தோழர் சுரேஷ், நான்  இருவருமாகச் சென்று ஏஆர்கே–யைச் சந்தித்து மூன்று மணி நேரம் உரையாடினோம். பார்வதி யம்மாளிடம், “உங்கள் கணவர் மகத்தான தோழர்.  அவருடைய இயக்க வாழ்க்கைக்கு நீங்கள் ஆதரவாக இருந்தது ரொம்பவும் முக்கியமானது. போற்றப்பட வேண்டியது” என்று சொன்னேன். அவர் உடனே, “எங்கள் கல்யாணம் நடந்த அன்னிக்கு சாயங்காலமே இவர், ஆஃபிஸ் வேலை  முடிஞ்சு கட்சி வேலைக்கும், சங்க வேலைக்கும் போயிட்டு வீட்டுக்கு வர தாமதமாகும். சில நாட்கள்ல வீட்டுக்கு வர முடியாமலும் போகும்னு சொல்லிட் டார். நானும் அதுக்குத் தயாராகிட்டேன். அப்ப யிருந்து இப்பவரை அவருக்கு துணையாத்தான் நானும் பிள்ளைகளும் இருந்து வர்றோம்” என்றார். தற்போது 88 வயதாகும் தோழர் ஏஆர்கே ஓய்வுபெற்ற காப்பீட்டுக் கழக ஊழியர்களுக்கான கட்சிக் கிளையில் தன்னால் இயன்ற பணிகளைச் செய்து வருகிறார். இதுவரையில் தான் சேகரித்து வைத்துள்ள புத்தகங்களை கட்சியின் மாவட்டக்குழு நூலகத்திற்கு வழங்கவிருக்கிறார். தோழர் ஏஆர்கே போன்ற தோழர்கள் அர்ப்பணிப்போடு செயல்பட்ட காரணத்தினால்தான் இப்போதும் ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் அகில இந்திய அளவிலும் மாநில அளவிலும் போர்க் குணமிக்க சங்கமாக இயங்கி வருகிறது. கடந்த 65 ஆண்டுகளுக்கு மேல் தொடரும் தோழர் ஏஆர்கே–யின் இயக்கப் பணி பாராட்டுக்குரியது, பின்பற்றத்தக்கது.

தோழர் ஏஆர்கே ஊழியர்கள் மத்தியில் முன்னணி ஊழியர்களை வார்த்தெடுக்கும் பணியை திறம்படச் செய்தார். ஊழியர்களுக்கு தொழிற்சங்க இயக்கம் குறித்து வகுப்புகள் நடத்தி அதில் சங்கத்திற்கு அப்பாற்பட்டு செயல்பட நேரம் காலம் ஒதுக்கிட முடியுமா என கேட்டு  ஒரு கேள்வித்தாள் கொடுத்து அதற்கு விருப்பம் தெரிவித்தவர்களுக்கு தனியான வகுப்புகள் நடத்தி அத்தகைய முன்னணி ஊழியர்களை இடதுசாரி முற்போக்கு இயக்கங்களின்பால் கொண்டு வந்தார்.  அவ்வாறு ஈர்க்கப்பட்ட தோழர்கள்தான் இன்றைக்கு நிறுவனத்தின் தொழிற்சங்க தலைவர்களாக பணியாற்றி வருகிறார்கள். 1997 ஆம் ஆண்டு தோழர் ஏஆர்கே ஓய்வுபெறுகிறபோது சங்கத்தின் சார்பில் அவருடைய பங்களிப்பு பற்றி வெளியிட்ட துண்டறிக்கையில் உள்ள சில அம்சங்களை இங்கே குறிப்பிடுவது பொருத்தமானது. “கொள்கைப் பிடிப்பு கொண்ட பழுத்த தொழிற்சங்கவாதி, உணர்ச்சிகரமான பேச்சாளர், பிரச்சனைகளையும், புள்ளி விபரங்களையும் அலசி ஆராய்ந்து சரியான முடிவுகளை எடுப்பதில் தனி ஆர்வம் காட்டுபவர்.” “1981 ஆம் ஆண்டு காலவரையற்ற வேலை நிறுத்தம், 1983-84 ஆம் ஆண்டு எல்.ஐ.சி.யை கூறுபோட அரசு முனைந்ததற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் கோவை பகுதி ஊழியர்கள் பிரம்மாண்டமான வகையில் பங்கேற்றனர். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அறைகூவல்கள் அனைத்தும் சீரிய முறையில் செவ்வனே நிறைவேற்றப்பட்டு வருகின்றன.  எல்.ஐ.சி ஊழியர்கள் அனைத்து பிரிவினரின் நலன்களை பேணுவதில் பகுதி சங்கம் அக்கறையுடனும்,  கவனத்துடனும் செயல்பட்டு வருகிறது. சங்கத்தினை வழிநடத்தியதில் கூட்டுத் தலைமை முறை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” “முகத்துதியில் ஈடுபடுகிறோம் என்ற குற்ற உணர்வே இல்லாமல் உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் நாங்கள் அறுதியிட்டு கூற விரும்புவதெல்லாம் இது தான். “கோவைப்பகுதி இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஊழியர் சங்கத்தின் பெருமையான சாதனைக்கெல்லாம் தோழர் ஏஆர்கே அவர்களின் செயல்பாடுகள் தான் அதி முக்கிய காரணம்”. இன்றைய இளைய தலைமுறை யினர் தோழர் ஏஆர்கே அவர்களின் தொழிற்சங்க வாழ்க்கையிலிருந்து சரியான படிப்பினைகளை பெற வேண்டும். ஒன்றுபட்ட தொழிற்சங்க இயக்கத்திற்கு வலுவூட்ட வேண்டும்.”