மதுரை:
தென்காசி மாவட்டத்தில் அரசு பணிகளுக்கு, பணி ஆணைவழங்கப்படாமல் எவ்வாறு வேலை நடைபெறுகிறது? என்பது குறித்து அரசுத் தரப்பில் விளக்கம் பெற்று தெரிவிக்க சென்னைஉயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தர விட்டுள்ளது.தென்காசியைச் சேர்ந்த ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்திற்கான கட்டமைப்பு கட்டுமானப் பணிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பாலங்கள் போன்ற வேலைக்கு பல்வேறு அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்காக டெண்டர் விடும் பணி நடைபெற்றது. முறைப்படி கடந்த மே 2-ஆம்தேதி 13 வேலைகளுக்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இதில் ஒன்பது பணிகளுக்கான பணி ஆணை வழங்கப்பட்டது. மீதமுள்ள நான்குபணிகளையும் பணி ஆணை பெறாமல் ஒரே தனியார் நிறுவனம் எடுத்து வேலைகளை செய்து வருகிறது.
நான்கு பணிகளுக்கு பணி ஆணை பெறாமல் 60 சதவீதம் முதல் 75 சதவீத பணிகளை தனியார் நிறுவனம் முடித்திருக்கும் நிலையில், தற்போது இந்த நான்கு பணிகளுக்கும் செப்டம்பர் 29-ஆம் தேதி புதிதாக டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பழைய டெண்டர் அறிவிப்பு ரத்து செய்யப்படாமல் மீண்டும் புதிதாக டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது ஏற்கத்தக்கதல்ல. இது சட்ட விரோதமானது.இது குறித்து புகைப்படத்துடன் அதிகாரி களிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை அரசு அதிகாரிகளால் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. நான்கு பணிகளுக்கும் செப்டம்பர் 29-ஆம் தேதி புதிதாக வெளியிட்ட டெண்டர் அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் கல்யாண சுந்தரம், அப்துல் குத்தூஸ் அமர்வில் வியாழனன்று விசாரணைக்கு வந்தது .விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் எந்தவித பணி ஆணை இல்லாமல் தனியார்நிறுவனம் பணிகளை செய்து வருவதாகக்கூறி, அதற்கான புகைப்பட ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளதாகவும் தெரிவித்தனர்.இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பணி ஆணை வழங்கப்படாமல் எவ்வாறு வேலை நடைபெறுகிறது? என்பது குறித்து அரசுதரப்பில் விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.