tamilnadu

img

ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு என்றாலே அரசுக்கு இவ்வளவு பதட்டம் ஏன்? - சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி!

ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு என்றாலே அரசுக்கு இவ்வளவு பதட்டம் தொற்றிக் கொள்வது ஏன்? என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

நாடாளுமன்றத்தில் ஐ.ஐ.டிகளில் ஓராண்டு இலக்கோடு நடைபெற்று வரும் நிலுவைக் காலியிடங்களுக்கான ஆசிரியர் பணி நியமனங்கள் பற்றிய கேள்வி ஒன்றை (எண் 2302/ 01.08.2022) எழுப்பி இருந்தேன். 
எனது கேள்விகள்
ஓராண்டு இலக்கோடு அறிவிக்கப்பட்ட நிலுவைக் காலியிடங்களுக்கான ஆசிரியர் பணி நியமனங்களில் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி இடங்கள் நிரப்பப்படவில்லை என்ற செய்திகளை அரசு அறியுமா? சென்னை ஐ.ஐ.டியில் அறிவிக்கப்பட்ட 49 காலியிடங்களில் 13 இட ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படவில்லை என்பதை அரசு அறிந்துள்ளதா? அரசு இட ஒதுக்கீடு அமலாக்கத்தை கண்காணிக்க ஏதாவது முறைமை வைத்துள்ளதா? ஆசிரியர் நியமன இடஒதுக்கீடு சட்டம் 2019 ன் அமலாக்கத்தை உறுதி செய்ய குழுவை உருவாக்குமா? இந்தியா முழுவதும் உள்ள ஐ.ஐ.டி களுக்கு எவ்வளவு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன? எவ்வளவு விண்ணப்பங்கள் வரப் பெற்றன? நிரப்பப்படாத ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி காலியிடங்கள் எவ்வளவு? என்ற கேள்விகள் 5 பகுதிகளாக அதில் இடம் பெற்று இருந்தன. 
அமைச்சர் பதில்
எனது கேள்விக்கு ஒன்றிய கல்வி இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் பதில் அளித்துள்ளார். 
"அ" முதல் "உ" வரை ஐந்து கேள்விகளாக இருந்தாலும் பதில் மொத்தமாக ஐந்து கேள்விகளுக்கும் சேர்த்து தரப்பட்டுள்ளன. இப்படி பல கேள்விகளுக்கு ஒரு பதில் தருவது நாடாளுமன்ற நெறிகளுக்கு முரணானது என்பதை ஏற்கெனவே நான் சுட்டிக் காட்டியுள்ளேன். ஆனால் இந்த முறையும் அந்த மீறல் நடந்துள்ளது. கேள்வி வாரியாக பதில் தந்தால் அரசின் நடவடிக்கைகளில் உள்ள தவறுகள் மீது கூர் கவனம் ஏற்பட்டு விடும் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. 
பதில்களும் ஐ.ஐ.டி களின் மீறலை மறைப்பதாகவே உள்ளன. 
ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் 1961 சட்டப்படியும், அதன் தொடர்பான மற்ற சட்டங்களின் படியும் இயங்குகிற தன்னாட்சி பெற்ற அமைப்பாகும் என்று பதில் துவங்குகிறது. 2019 ஆசிரியர் நியமன இட ஒதுக்கீடு சட்டம் மீறப்படுகிறது என்பதுதானே கேள்வி. இதில் தன்னாட்சிக்கு என்ன சம்பந்தம் உள்ளது. தன்னாட்சி என்றால் கேள்விக்கு அப்பாற்பட்டவை என்றா அர்த்தம்? 
ஐ.ஐ.டி ஆசிரியர் நியமனம் பல கட்டங்களை கொண்டது; ஆதலால் காலம் எடுக்கும் என்ற கருத்தை முன் வைக்கிறது அமைச்சரின் பதில். இதெல்லாம் இலக்கிடப்பட்ட பணி நியமனத்தை ஓராண்டு காலக்கெடுவோடு செப் 2021ல் அறிவிக்கும் போது தெரியாதா? ஓராண்டு இன்னும் ஒரு மாதத்தில் முடியப் போகிற நேரத்தில்தானே இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. எந்தெந்த ஐ.ஐ டி கள் எவ்வளவு காலியிடங்களை அறிவித்தன? எவ்வளவு நிரப்பப்பட்டுள்ளது? நிரம்பவில்லை என்றால் என்னென்ன காரணங்கள்? என்பதுதானே கேள்வி. அதற்கு பதில் இதுவா? 
எதற்காக "வேண்டுதல்"
கல்வி அமைச்சகம் இலக்கிடப்பட்ட பணி நியமனங்களை நடத்துமாறு "வேண்டியது" ("Requested" ) என்று உள்ளது. இந்த தொனியே சரியில்லை. சட்டப்படி இட ஒதுக்கீடை கடைப்பிடிப்பதில் "வேண்டுவது" எங்கே வருகிறது? அரசியல் சாசனத்தை விட "வர்ணாஸ்ரம தர்மம்" மேலானது என்பதாலா? அரசு "ஆணையிடுகிறது" எனச் சொல்ல வேண்டாமா?
கல்வி அமைச்சகம் ஒரு கண்காணிப்பு செல் வைத்துள்ளது என்கிறீர்கள்! அந்த செல் இதுவரை கண்காணித்ததில் ஏதேனும் மீறல்களை கண்டுபிடித்துள்ளதா? இல்லை, எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது என்ற முடிவுக்காவது வந்துள்ளதா? 
ஆசிரியர் நியமன விவரங்களை ஏ.ஐ.சி.டி.இ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு ஐ.ஐ.டி களை "வேண்டிக் கொண்டுள்ளதாக" பதிலில் கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்த இணைய தளத்தில் என்ன பதிவேற்றம் இதுவரை செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களையாவது தந்திருக்கலாமே! அங்கு போய் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதற்கு எதற்கு நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம்? AICTE portal இணைய தளத்தில் தேடுதலுக்கான குறிப்புகள் கூட தரப்படவில்லை. அதில் தேடினாலும் எளிதாக கிட்டவில்லை. அதில் பதிவேற்றம் நடைபெறுகிறதா? ரோஸ்டர் விவரங்களும் இடம் பெறுமா? என்று கூட உறுதி செய்யாமல் பதிவேற்றம் செய்ய "வேண்டியுள்ளோம்" என்றுதான் பதிலில் உள்ளது. 
என்ன பதில் இது? 
இதுதான் சமூக நீதி குறித்து அரசுக்குள்ள அக்கறையின் லட்சணமா? எத்தனை முறை கேள்வி எழுப்பினாலும், கடிதம் எழுதினாலும் இப்படி வழுக்கலான பதில்!
ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு என்றாலே அரசுக்கு இவ்வளவு பதட்டம் தொற்றிக் கொள்வது ஏன்? வேண்டுதல் பயன் தராது அமைச்சர் அவர்களே! சட்ட மீறல் இருப்பின் நடவடிக்கை தேவை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;