மதுரை:
தொல்லியல் துறை இரண்டாண்டு பட்டயப் படிப்பு அறிவிப்பாணையில் தமிழ் மொழியைத் தவிர்த்து அறிவிப்பாணை வெளியிட்ட அதிகாரி யார் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
தொல்லியல்துறை இரண்டாண்டு பட்டய படிப்பு அறிவிப்பாணையில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்து தமிழ் மொழியை இணைத்து அறிவிப்பை வெளியிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வரும் மத்திய தொல்லியல் துறை கல்லூரியில், தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், இந்திய வரலாறு, தொல்லியல்துறை, மானிடவியல் ஆகிய துறைகளில் முதுகலைப்பட்டம் மற்றும் சமஸ்கிருதம், பாலி, மற்றும் அரபு மொழிகளில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வித் தகுதியில் பழமையும், பெருமையும் மிக்க செம்மொழியான தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து, கல்வித்தகுதியில் செம்மொழியான தமிழ் மொழியையும் இணைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு வெள்ளியன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது .விசாரணையின்போது மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பாக வியாழனன்று செம்மொழியான தமிழ் மொழியையும் இணைத்து அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்தார்.இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர். “ஏன் அறிவிப்பாணை வெளியிடும் போதே செம்மொழிகளில் முதன்மை மொழியான தமிழ் மொழியை இணைக்கவில்லை? இந்த அறிவிப்பாணையை தயார் செய்த அதிகாரி யார்? ஒரு அதிகாரி தொல்லியல் துறையில் அறிவிப்பாணை தயாரிக்கிறார் என்றால் குறைந்தபட்சம் செம்மொழிகள் எவை என்று தெரியாத அளவிற்கு அதிகாரி செயல் படுவாரா? அந்த அதிகாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன” எனக் கேள்வியெழுப்பிய நீதிபதிகள், “மத்திய அரசு சார்பாக தற்போது தமிழ் மொழியை இணைத்து வெளியிட்டுள்ளதாகக் கூறுகிறீர்கள். ஆனால் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்த பின்புதான் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழ் ஆர்வலர்களும் மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பிய பின்தான் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
மொழி பிரச்சனைகளைக் கையாளும்போது கவனமாக செயல்பட வேண்டும். இந்தியாவில் மாநிலங்கள் சாதி, மத அடிப்படையில் பிரிக்கப்படவில்லை. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. மொழிகளிலே பழமையான மொழியான தமிழ் மொழியை மறந்து தொல்லியல் துறை சார்பாக அறிவிப்பை வெளியிட்டது ஏன்? ஒரு வேளை இதற்கான எதிர்ப்புக் குரல் எழுப்பவில்லை என்றால் தமிழ்மொழி இணைக்கப்பட்டு இருக்குமா?’’ என்றும்கேள்விகள் எழுப்பிய நீதிபதிகள், பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து மத்தியஅரசு விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு வழக்குவிசாரணையை 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.