tamilnadu

img

மாணவர்கள் எதை தெரிந்து கொள்ளணும் - தேனி சுந்தர்

அது ஒரு மேல்நிலைப் பள்ளி. அரசுப் பள்ளி. மொத்தம் 300 குழந்தைகள் மட்டுமே பயில்கின்றனர். அங்கு குழந்தைகளிடம் பேசுவதற்காக ஒரு முறை என் நண்பர் அழைத்திருந்தார். பள்ளியில் சரிபாதி குழந்தைகள் அரங்கில் இருந்தனர். ஐந்தாறு ஆசிரியர்களும் உடன் இருந்தனர்..

வழக்கம் போல தலைமை ஆசிரியை உரை.. அது இது என அரை மணி நேரம் ஓடி விட்டது. அவர்களது உரையின் போதே சார் அதைப் பேசுவார்.. சார் இதைப் பற்றி பேசுவார் என்று அவரவர்க்கு சில கோடுகளைப் போட்டுச் சென்றனர். எந்த கோட்டிலும் போக எனக்கு விருப்பம் இல்லை.

அன்று ஒரு விஞ்ஞானியின் பிறந்த நாள். எனவே அந்த விஞ்ஞானியின் பிறப்பு, இறப்பு, ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் மற்றும் ஆண்டுகள், நாடு நகரங்கள் பற்றியெல்லாம் நான் பேசப் போவதாக முன்னுரைகள் வழங்கப் பட்டிருந்தன.. ஆமாம். அவர்கள் கோடிட்ட இடங்கள், பொருத்துக போன்ற ஒரு மதிப்பெண் வினாக்களுக்கும் சுருக்கமாக விடை அளி போன்ற வினாக்களுக்கும் குழந்தைகள் பதில் சொல்ல தயார்படுத்தும் மனநிலையில் தான் இருந்தனர்..
நான் எனக்குரிய பாதையில் என் உரையைத் தொடங்கினேன். அது உரையாடலாக நகர்ந்தது. நான் துவக்கத்திலேயே சொல்லி விட்டேன். நான் பேசப் போவதில்லை. நாம் தான் பேசப் போகிறோம்.. நான் பேசினால் என்னோடு நீங்களும் பேச வேண்டும். இல்லையென்றால் எனக்கு பேச வராது. நான் பாடினால் என்னோடு நீங்களும் பாட வேண்டும். இல்லையென்றால் எனக்கு பாட வராது..
என்னுடைய டீலுக்கு குழந்தைகள் ஓகே சொல்லி விட்டனர். நான் ஹாய் என்றேன்.. அவர்களும் ஹாய் சொன்னார்கள்.

முதலில் யாரேனும் நான்கைந்து பேர் முன்வாருங்கள்.. ஏதேனும் ஒரு கேள்வி ஒவ்வொருவரும் கேளுங்கள் என்றேன். 150 குழந்தைகளில் ஒருவரும் முன்வரவில்லை. மீண்டும் மீண்டும் ஊக்கப்படுத்தி பேசிய பிறகு மூன்று கேள்விகள் மட்டுமே முன்வந்தன. ஆனால் ஒருவருக்கொருவர் காதுகளில் கிசுகிசுத்துக் கொண்டனர். ஒன்றும் இல்லாமல் இல்லை. முன் வந்த மூன்று கேள்விகளை விட மிகச் சிறப்பான கேள்விகள் இருந்திருக்கக் கூடும். தயக்கம்.. பயம்..!
அப்புறம் அறிவியல் பார்வை, அறிவியல் மனப்பான்மை போன்றவற்றை எளிமையான உதாரணங்களுடன் பேசி அறிவியலாளர்களைக் கொண்டாடுவது முக்கியம் இல்லை. அறிவியல் விழிப்புணர்வோடு அன்றாட வாழ்வில் செயல்படுவதே மிக முக்கியம் என்று கூறி என் உரையை முடித்தேன்..

உண்மை தானே.?! விஞ்ஞானி பெயர், பிறந்த நாள், நாடு, கண்டுபிடிப்புகள், வருடம் ஆகியவற்றை மனப்பாடம் செய்வதும் செய்ய வைப்பதும் அல்ல அறிவியலின் நோக்கம். வகுப்பில் ஆசிரியர் கேட்க, கேட்க டக்கு டக்குன்னு பதில் சொல்ல வைப்பதும் அல்ல அறிவியல்.. கேள்விகள் கேட்க வைப்பதே அறிவியல்.. கேள்விகள் மூலம் மேலும் மேலும் தன்னை வளர்த்துக் கொள்வதே அறிவியல் மனப்பான்மை... ஆக, கேள்விகள் எழ வேண்டும் இல்லையா..!
பள்ளிக் கூடங்கள் பதில் சொல்லி மட்டுமே பழக்கப் படுத்திக் கொண்டிருக்கின்றன. குழந்தைகளுக்கு பள்ளியைத் தாண்டிய அனுபவங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது மிக அவசியமாக இருக்கிறது.. அதன் மூலம் நிறைய கற்றுக் கொள்கிறார்கள். அதற்கும் ஒரு உதாரணம் என் நினைவுக்கு வருகிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு நெல்லையில் ஒரு தனியார் கல்லூரியில் அறிவியல் இயக்கம் சார்பில் குழந்தைகளுக்கான மாநில அளவிலான ஒரு அறிவியல் திருவிழா நடைபெற்றது. அதில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 150 குழந்தைகள் கலந்து கொண்டனர். அங்கும் ஒரு அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. கேள்விகள் கேட்பது குறித்து ஒரு சிறு அறிமுகம் வழங்கப் பட்டது. அவ்வளவு தான். கொஞ்ச கால அவகாசமும் வழங்கப் பட்டது. அன்று ஒரு நாள் மட்டும் குழந்தைகள் தாளில் எழுதிக் கொண்டு வந்து கொடுத்த கேள்விகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. அந்த கேள்விகள் வீணாகவும் இல்லை. நீண்ட காலம் துளிர் இதழில் அதற்கான பதில்கள் (அந்தக் குழந்தைகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டு) வெளிவந்து கொண்டிருந்தன.

சரி விசயத்திற்கு வருவோம். அந்த நிகழ்ச்சியின் இறுதியில் குழந்தைகளின் பின்னூட்டமும் கேட்டேன். தயங்கித் தயங்கி ஒரே ஒரு பெண் குழந்தை வந்து மேடையில் நின்றதும் எனக்கு கைகால்கள் உதறுகின்றன. பதற்றமாக இருக்கிறது என்றாள். முன்வந்து மேடை ஏறியமைக்கு பாராட்டு தெரிவித்து ஒரு சிறு புத்தகத்தை வழங்கி நிகழ்வை நிறைவு செய்தோம்..

நிகழ்வு முடிந்து கிளம்பும் போது சரண் என்கிற எட்டாம் வகுப்பு பையன் ஓடி வந்தான். சார் நான் ஒண்ணு சொல்லணும் என்றான். சொல்லுப்பா என்ற படி அவன் தோளில் கைபோட்டு கொண்டேன்..

“இவ்வளவு நாளாக சார் அவங்க பாடம் நடத்துவாங்க.. கேள்வி பதில் படிக்க சொல்லுவாங்க.. பரிட்சை வப்பாங்க.. நாம கரெக்டா பதில் சொல்லணும்.. பதில் எழுதணும்.. அப்டின்னு தான் நெனச்சுக்கிருந்தேன் சார்.. நாமளும் கேள்வி கேட்கலாம். நம்மாலும் கேள்வி கேட்க முடியும்ங்கிறத இன்னைக்கு தெரிஞ்சுகிட்டேன் சார்..!”