மதுரை:
“கடந்த மாதம் காணொளிக் காட்சி மூலம் மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை ஆட்சியர் அன்பழகன் நடத்தினார். அப்போது உரங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க வேண்டும். காலவதியான மருந்துகள் விற்கப்படுகின்றன இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்க பிரதிநிதி ஒருவர்வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்த ஆட்சியர் வேளாண்அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என உறுதியளித்தார்”ஆனால் இதுவரை அப்படியேதும் நடைபெற்றுவிடவில்லை என்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்திய கள ஆய்வு அம்பலப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மதுரை மாவட்டத் தலைவர் எஸ்.பி.இளங்கோவன், மதுரை மாவட்டத்தில் ஒரு போக பாசன் பகுதியில் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. நெல் கதிர் பரிவதற்கு முன்னால் இடக்கூடிய அம்மோனியம் குளோரைடு, அம்மோனியம் சல்பேட் உரங்களுக்கு தட்டுப்பாடு உள்ளது. மதுரை மாட்டுத்தாவணி நெல் வணிக வளாகத்திற்குள் செயல்படுகிற உர விற்பனைக் கடைகளில் இருப்பு இல்லை என்கின்றனர்.மாட்டுத்தாவணி வணிக வளாகத்தில் உள்ள அனைத்து உரக்கடைகளிலும் கூடுதல் விலைக்கு உரம் விற்கப்படுகிறது.
ரூ.650 விற்கவேண்டிய 50 கிலோ எடை கொண்ட அம்மோனியம் குளோரைட் ரூ.700 முதல் ரூ.800-க்கு விற்கப்படுகிறது. ரூ. 660-க்கு விற்க வேண்டிய 50 கிலோ எடை கொண்ட சல்பேட் மூடைம ரூ. 700 வரை விற்கின்றனர். இது தொடர்பாக மாவட்ட வேளாண் உதவி இயக்குநரிடம் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. மதுரை ஆட்சியரும், வேளாண்துறையும் தலையிட்டு விவசாயிகளுக்கு உரங்கள், உரிய விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாட்டுத்தாவணி நெல் வணிக வளாகத்திற்குள் செயல்படும் உரகடைகளில் மட்டுமல்ல மாவட்டம் முழுவதும் உள்ள உரக்கடைகளில் விலைப்பட்டியல், உர இருப்பு விவரங்கள் பளிச்சென விவசாயிகளுக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள விலையில் உரங்களை விற்காமல் பதுக்கி வைத்தி கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மூன்று நாட்களுக்குள் விவசாயிகள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் விவசாயிகளை திரட்டி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தும் என்றார்.