tamilnadu

img

சாக்கடைக் கொசுக்களா நாம் ? சரித்திரத்தின் சக்கரங்கள் நாம்! - இரமணன்

பெரும்பாலான வரலாற்று ஆவணங்களில் சாம்ராஜ்ஜியங்களைக் கட்டியவர்கள்;
நினைவுச் சின்னங்களை எழுப்பியவர்கள்; போர்களை வென்றவர்கள் யார் என்று
பார்த்தால், மன்னர்கள்; மாபெரும் மனிதர்கள் என்றே படிக்கிறோம்.
அதைத்தான் இன்றும் நமது ஆட்சியாளர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய
தொழிலதிபர்களே ‘செல்வத்தை உருவாக்குபவர்கள்’ என்கின்றனர். ஜெர்மானியக்
கவிஞர் பெர்தோல் பிரக்ட் (1898-1956) A Worker Reads History என்கிற இந்தப் பாடலில்
அந்தப் பார்வையை கேள்விக்குள்ளாக்கி புதிய பார்வையை கொடுக்கிறார்.
ஒரு தொழிலாளி வரலாறு படிக்கிறான்
நைல் நதிக்கரை நகரமாம் தெபசின்
ஏழு வாயில்களை கட்டியவர் எவர்?
புத்தகங்களில் நிறைந்திருக்கும் அரசர்களா
கரடு முரடான கற்பாறைகளை
இழுத்து வந்தார்கள்?

மீண்டும் மீண்டும் அழிக்கப்பட்ட பாபிலோனை
 திரும்ப திரும்ப நிர்மாணித்தவர் எவர்?
தங்கத்தால் ஜொலிக்கும் சுமத்ராவின்
லிமா மாளிகைகளில் எதிலாவது
அதை எழுப்பியவர்கள் வாழ்ந்ததுண்டா?
சீனப் பெருஞ்சுவர் முடிக்கப்பட்ட மாலையில்
காணாமல் போனானே
அதைக் கட்டிய தொழிலாளி?
ரோம சாம்ராஜ்ஜியத்தில் நிறைந்து காணும்
வெற்றி வளைவுகளே
உங்களை எழுப்பியவர் யார்?
சீசர் கண்ட வெற்றி
யார் மீது நின்று பெற்றது?
பாடல்களில் வாழும் பைசான்டியமே
அரண்மனைகளே உன் வாழ்விடமா?

காவிய அட்லாண்டிசிலும்
கடல் புகுந்த இரவில்
அடிமைகளுக்கு கட்டளையிட்டுக் கொண்டுதானே
அவர்கள் மூழ்கினர்?
இளம் அலக்ஸாண்டர் இந்தியாவை வென்றது
தனியாகவா ?

கவுல்களை சீசர் தோற்கடித்தார்
எனில்
அவரது படையில்
ஒரு சமையல்காரர் கூடவா இல்லை?
ஸ்பெயினின் பிலிப்
தன் கடற்படை மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது
கண்டு கண்ணீர் வடித்தாராமே?
கண்ணீர் சிந்திய கண்கள் வேறு எதுவும் இல்லையா?
மகா ஃப்ரட்ரிக் ஏழாண்டுப் போரை வென்றாரே!
அவருடன் வெற்றியில் பங்கு கொண்டோர் எவர்?
வரலாற்றின் ஒவ்வொரு பக்கமும்
வெற்றியால் நிரம்பியுள்ளது.
ஆயின்,
வெற்றி நடனம் எவர் தியாகத்தின் மீது ஆடப்பட்டது?
ஒவ்வொரு பத்தாண்டிலும்
ஒரு மாபெரும் மனிதன் தோன்றுகிறான்!
அவனின் அட்டகாசங்களை தாங்கியது எவர்?
விவரங்கள் ஏராளம்
கேள்விகளும் ஏராளம்.
K K K

புரட்சிகரமான இந்தப் பார்வையை பாரதியிடமும் பாரதிதாசனிடமும் காணலாம்.

“இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!
யந்திரங்கள் வகுத்திடு வீரே!
கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே!
கடலில் மூழ்கிநன் முத்தெடுப்பீரே!
அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயி ரந்தொழில் செய்திடு வீரே!
பெரும்பு கழ்நுமக் கேயிசைக் கின்றேன்.
பிரம தேவன் கலையிங்கு நீரே!”

படைப்பதெல்லாம் தொழிலாளி என்கிற பாரதியை தொடர்ந்து பாரதிதாசன், உலகம்
மொத்தமுமே தொழிலாளரின் உழைப்புக்கு சாட்சி என்கிறார்.

சித்திரச் சோலைகளே - உமை நன்கு
திருத்த இப்பாரினிலே - முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ !
உங்கள் வேரினிலே.

தாரணியே! தொழிலாளர் உழைப்புக்குச்
சாட்சியும் நீயன்றோ?

‘ஒரு தொழிலாளி வரலாறு படிக்கிறான்’ என்று பிரக்ட் தன்னையே தொழிலாளியாக
மாற்றிக்கொண்டு கூறுகிறார். வரலாற்றை படைக்கும் தொழிலாளி அதை
படிக்கவும் வேண்டும் என்பதே இன்றய தேவை.