tamilnadu

img

மூத்த திரைக்கலைஞர் ராஜேஷ் காலமானார்

மூத்த திரைக்கலைஞர் ராஜேஷ் காலமானார்

முதலமைச்சர்  நேரில் அஞ்சலி

சென்னை, மே 29- தமிழ்த் திரையுலகின் மூத்த திரைக் கலைஞர் ராஜேஷ் திடீர் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை (மே 29) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75.  ஏற்கனவே மூச்சுத் திணறல் இருந்த நிலையில், இன்று காலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே இவரின் உயிர் பிரிந்தது.  1949-ஆம் ஆண்டு ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம், அணைக்காட்டை பூர்வீகமாக கொண்டவர் ராஜேஷ். வில்லியம்- வில்லி கிரேஸ் தம்பதிக்கு மகனாக பிறந்து மன்னார்குடியில் வாழ்ந்தவர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில பள்ளிக் கல்வியை முடித்தவர். பிறகு, காரைக்குடியில் உயர் கல்வியை தொடங்கி, சென்னையில் நிறைவு செய்தவர்.  ஆசிரியராக பணியில் சேர்ந்தாலும் நடிப்புக் கலையின் மீது ஆர்வம் கொண்டதால் நாடகத்தில் நடிக்க தொடங்கினார். அவள் ஒரு தொடர்கதை மூலம் 1974 ஆம் ஆண்டு திரையுலகிற்கு அறிமுகமான ராஜேஷ், 1979-ஆம் ஆண்டு கன்னி பருவத்திலே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகன், குணச்சித்திர நடிகர் என 150-க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு வேடங்களை ஏற்று நடித்துள்ளார்.  தற்போது உடல் நலக்குறைவு காரணமாக காலமான ராஜேஷின் உடல் சென்னை ராயபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள், சினிமா பிரபலங்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைத்துறையினர் - அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதல்வர் அஞ்சலி-இரங்கல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் நேரில் சென்று ராஜேஷ் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  கட்சி இரங்கல்!

திரைப்படக் கலைஞர் ராஜேஷ் மறைவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை விடுத்துள்ளார். அதில், “திரைப்படக் கலைஞர் ராஜேஷ் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். ‘அவள் ஒரு தொடர்கதை’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஜேஷ், ‘அந்த ஏழு நாட்கள்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ உட்பட 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியின் முதல்வராகவும் அவர் பணியாற்றியுள்ளார். தீவிரமான வாசிப்பாளரான அவர், இடதுசாரி இயக்கங்களின் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தார். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.