தோட்டத்தில்
காய்கறி அறுவடை...
காய்த்துப்போனது கைகள்.
•••
ஐஸ் குச்சிகள்
அனல் காய்ந்தன
வாயின் கதகதப்பில்.
•••
மேகம் கருத்தது...
விவசாயி வாழ்வில்
வெளிச்சம்.
•••
சுவையாயிருந்தது
மாட்டுக்கு...
இலை வரைந்த சுவரொட்டி.
•••
உதிர்ந்த சருகுகளைக் கண்டு
சலனமடையவில்லை...
அமைதியாய் நின்றது மரம்.
•••
கூடடைந்த பட்சிகளை பார்த்தவாரே...
இரவு வேலைக்கு நடந்தான்.
•••
சிறுவயதில் பயந்தேன்
நிழலைக் கண்டு
நீங்காது வருமென அறியாமல்.
•••
மிட்டாய் காசை
பிச்சையிட்டான் சிறுவன்
இனித்தது மனம்.
•••
காட்டின் கட்டமைப்பாளர்
கையேந்திய நிலையில்
கோவிலில் யானை.
•••
கதவை திறக்கும் முன்
காது திறந்தது
பூட்டிற்கு...
•••
பகலில்
உயிரற்றுப் போயின
தெருவிளக்குகள்.
•••
மரக்கிளையை வெட்டி
வேலியிட்டான்
புதிதாய் நட்ட பூச்செடிக்கு
•••
அமாவாசையன்று
நிறைவாய் உறங்கியது குழந்தை
நிலவும் உறங்கியதை நினைத்து.
•••
தனித்த இரவுகளில்
துணையாயிருந்தது
ஜன்னலில் நிலா.
•••
காணாமல் போகப்போகிறோமென
அறியாமலே
கடலில் கலந்த நதி.
•••
சு.இளவரசி,
சிவகங்கை.