சென்னை, ஜன.7- ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு வெளியாட்கள் தான் காரணம்; ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது என வேதாந்தா குழுமம் நீலிக்கண்ணீர் வடிக்கிறது. வேதாந்தா குழுமத்தின் சார்பில் நிர்வாக செயல் இயக்குநர் சுமதி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ஆலையை மூடுவது தீர்வாகாது, ஸ்டெர்லைட் நிறுவனம் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை எதிர்பார்க்கிறது என்றார். நான்கு லட்சம் டன் உற்பத்தி திறன் கொண்ட ஸ்டெர்லைட் காப்பர், ஆலையை மூடுவதன் சுற்றுச்சூழல் மாசவடைவதைத் தடுக்க முடியும்;
ஆலையை நிரந்தர மூடவேண்டும் என வலியுறுத்திய போராட்டத்தை “வன்முறைப் போராட்டம்” எனக் கூறிய அவர், “2013-ஆம் ஆண்டிற்குப் பிறகு, மாசுபாடு குறித்து எந்தப் புகாரும் வரவில்லை. நாங்கள் விரிவாக்கத்திற்கு செல்ல திட்டமிட்ட பிறகு போராட்டங்கள் தொடங்கியது, ஆலைக்கு எதிரான நிலைபாட்டை வெளிப்புற சக்திகள் தூண்டின” எனக் குற்றம் சாட்டினார். ஆலை மூடப்பட்டால் தமிழகத்தின் பொருளாதாரம் சீரழிந்து வருகிறது என வருத்தப்பட்டுக்கொண்ட செயல் இயக்குநர் சுமதி, ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என நாட்டில் பலர் குரல் எழுப்புவதாகவும் கூறினார். தொடர்ந்து மக்கள் போராட்டத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பலர் உயிரிழந்தனரே என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சுமதி, துப்பாக்கிச் சூடு உத்தரவு யார் கொடுத்தது என்று தனக்குத் தெரியாது என்று கூறிக் கொண்டார்.