உய்யக்கொண்டான் வாய்க்கால் தூர்வாரும் பணி: அமைச்சர் ஆய்வு
திருச்சிராப்பள்ளி, அக். 26- முக்கொம்பு மேலணையிலிருந்து மாயனூர் கண்மாய் வழியாக உய்யக்கொண்டான் வாய்க்கால் பாசனமானது, திருவெறும்பூர் மற்றும் தஞ்சை மாவட்ட எல்லை வரை உள்ள விவசாய நிலங்களுக்கு நீர் பாசனமாக விளங்கி வருகிறது. உய்யக்கொண்டான் வடிகால் நீரானது, திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் ஊராட்சி பூசத்துறை இடையே உள்ள குவளை வாய்க்காலில் கலந்து வெளியேற்றப்படுகிறது. இந்த குவளை வாய்க்கால் அருகே வேங்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் சுமார் 300 ஏக்கரில் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குவளை வாய்க்காலில் ஆகாயத்தாமரை அகற்றப்படாமலும், தண்ணீர் தேங்கி நிற்பதாலும் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்தன. இதுகுறித்து, தகவல் அறிந்த திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக பள்ளிக்கல்வி அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஞாயிறன்று குவளை வாய்க்காலை பார்வையிட்டதுடன், ஆகாயத்தாமரையை உடனடியாக அகற்றி துரிதமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
