திருவள்ளூர், நவ.9- திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு சுழற்சி முறையில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த அமிர்தம் வேணு என்பவர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவருக்கென ஒதுக்கப்பட்ட நாற்காலியில் உட்கார அனுமதியில்லை. கணக்கு வழக்குகளை ஒப்படைக்கவில்லை, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவரின் பெயரை எழுத கூட அனுமதிக்கவில்லை. ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக தேசிய கொடியை கூட ஏற்ற அனுமதிக்கவில்லை. துணைத் தலைவர் ரேவதி விஜயகுமார் தான் கொடியை ஏற்றினார்.அந்த அளவிற்கு சாதிய வெறி தலைவிரித்து ஆடியது. அதன் பிறகு தீக்கதிர் நாளிதழில் முதன் முதலில் செய்தி வெளியானது. இதனையடுத்து தனியார் நிறுவன தொலைக்காட்சி செய்தியாளர் செய்தி சேகரிக்க சென்ற போது கேமராவை பிடுங்கிக்கொண்டு செய்தியாளரை சாதி வெறியர்கள் தாக்கினர். பின்னர் காவல்துறையினர் வந்து நிலைமையை சரிசெய்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம் தேசிய கொடியை ஏற்றினார். அதன் பிறகு அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும், ஊராட்சி பணிகள் குறித்து கலந்து பேசி மக்களுக்கு சேவையாற்ற ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.ஆனால் மாவட்ட ஆட்சியர் சொன்ன எந்த அறிவுரையையும் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரி முதல் ஊராட்சி செயலர் வரை யாரும் ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை.
மீண்டும் தலைதூக்கும் சாதிய வெறி
ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் 9 வார்டுகளில் ஒரு வார்டு உறுப்பினர் மட்டும் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர். மற்ற 8 பேரும் மாற்று சமூகத்தை சார்ந்தவர்கள். இந்த சூழலில் ஊராட்சி மன்ற கூட்டம் நடத்த தலைவர் அழைப்பு விடுத்தால் துணைத் தலைவர் ரேவதி விஜயகுமார் உட்பட வார்டு உறுப்பினர்கள் யாரும் கூட்டத்திற்கு வருவதில்லை. பிடிஒ, ஒன்றிய பெருந்தலைவர், வார்டு உறுப்பினர்கள் யாரும் ஒத்துழைப்பு தருவதில்லை. ஊராட்சியின் எந்த பணியையும் செய்ய விடுவதில்லை. ஏன் தான் இந்த பொறுப்பிற்கு வந்தோமோ என்று ஊராட்சி மன்ற தலைவர் வேதனையுடன் தெரிவித்தார், கிராம சபை கூட்டமானாலும், மாதாந்திரக் கூட்டத்திற்கும் தகவல் கொடுத்தால் வருவதில்லை. காத்திருந்து பிறகு வார்டு உறுப்பினர்களின் வீடுகளுக்கே சென்று தீர்மான நோட்டில் கையெழுத்து வாங்குவதாக கூறுகின்றனர்.
ஊராட்சி மன்ற தலைவரை ஒதுக்கி விட்டு கிராம சபை கூட்டம்
நவம்பர் 1 அன்று சிறப்பு கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார். அந்த நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, துணைத் தலைவர் ரேவதி விஜயகுமார் தலைமையில், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றுள்ளது.இந்த உயர் சாதிய ஆதிக்கத்துடன் ஊராட்சியை செயல்பட விடாமல் தடுக்கும் ஆபத்தான போக்கு நிலவுகிறது.இது குறித்து நவம்பர் 6 அன்று கும்மிடிப்பூண்டி பிடிஒ அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம் புகார் கொடுத்துள்ளார். எனினும் எந்த பதிலுமில்லை. சிபிஎம் கண்டனம் 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளராக இருந்த வெ.இறையன்பு ஆத்துப்பாக்கம் ஊராட்சிக்கு நேரடியாக வந்து பல்வேறு அறிவுரைகளையும் வழங்கியுள்ளார். எதையும் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஏற்கவில்லை. மாறாக ஊராட்சி மன்ற தலைவரை ஒதுக்கி வைத்துவிட்டு கிராம சபை கூட்டம் நவ 1 அன்று நடைபெற்றுள்ளது. சட்ட விரோதமாக நடந்த கிராம சபை கூட்டத்திற்கு துணை போன கும்மிடிப்பூண்டி பிடிஒ மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சாதி ஆதிக்க துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் சாதிய வன்மத்துடன் நடந்து கொள்கிறார்கள் என புகார் எழுந்துள்ள நிலையில், சாதிய ரீதியாக கூட்டாக இணைந்து ஊராட்சியை முடக்குபவர்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் உடனடியாக சிறப்பு கிராம சபையை கூட்ட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
சிபிஎம் கண்டனம்
2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளராக இருந்த வெ.இறையன்பு ஆத்துப்பாக்கம் ஊராட்சிக்கு நேரடியாக வந்து பல்வேறு அறிவுரைகளையும் வழங்கியுள்ளார். எதையும் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஏற்கவில்லை. மாறாக ஊராட்சி மன்ற தலைவரை ஒதுக்கி வைத்துவிட்டு கிராம சபை கூட்டம் நவ 1 அன்று நடைபெற்றுள்ளது. சட்ட விரோதமாக நடந்த கிராம சபை கூட்டத்திற்கு துணை போன கும்மிடிப்பூண்டி பிடிஒ மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சாதி ஆதிக்க துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் சாதிய வன்மத்துடன் நடந்து கொள்கிறார்கள் என புகார் எழுந்துள்ள நிலையில், சாதிய ரீதியாக கூட்டாக இணைந்து ஊராட்சியை முடக்குபவர்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் உடனடியாக சிறப்பு கிராம சபையை கூட்ட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.