tamilnadu

img

பேருந்துகளில் நிறுத்த ஒலி அறிவிப்பு வசதி: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, நவ. 26 - மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ‘புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் மூலம் பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டத்தை சனிக்கிழமையன்று (நவ.26) சென்னையில் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் மக்களோடு மக்களாக அந்த பேருந்தில் சென்றார். சென்னையில் 500 பேருந்துகளில் புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் (ஜிபிஎஸ்) மூலம் பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை பயணிகள் முன்னரே அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 150 பேருந்துகளில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்ப ட்டுள்ளது. இத்திட்டத்தை மேலும் 1,000 பேருந்துகளுக்கு விரிவு படுத்தப்பட உள்ளது. அதற்கான பணிகள் நிறைவடைய உள்ளன. இந்த பேருந்து நிறுத்த ஒலி பெருக்கி அறிவிப்பு, அடுத்த பேருந்து நிறுத்தம் வருவதற்கு 100 மீட்டர் முன்னரே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிவிப்பு செய்யும். இதனால், பயணிகள் தாங்கள் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தத்தை எளிதில் அறிந்து கொள்ள முடியும். இந்த ஒலி அறிவிப்பு பார்வைத்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் வெளியூர் பயணிகளுக்கு மிகுந்த பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட தொடக்க விழாவிற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமை தாங்கினார். அமைச்சர் பி.கே.சேகர் பாபு, போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.