மதுரை:
மதுரை திருமங்கலம் அருகே நான்குவழிச்சாலையில் காரும் வேனும் மோதிக்கொண்டதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளர்கள் 13 பேர் காயமடைந்தனர்.சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் நடைபெற்ற தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையின் ஒன்பதாவது மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக ஒரு வேனில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.
அதே போல் சென்னை கோசபாட்டு செல்லப்பா தெருவைச் சேர்ந்த அண்ணாமலை (53) வேலை நிமித்தமாக சிவகாசிக்கு வந்துவிட்டு காரில் மதுரைக்கு வந்து கொண்டிருந்தார். காரை மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள இரும்பாடி பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த நாகேந்திரன் (27) ஓட்டி வந்தார்.
வேன் திருமங்கலம் அருகே உள்ள குதிரைசாரிகுளம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் ஊரகவளர்ச்சித்துறை ஊழியர்கள் வந்துகொண்டிருந்த வேன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் காரில் வந்த அண்ணாமலையும் ஒட்டுநர் நாகேந்திரனும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் . வேனில் வந்த சேலம் ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் செல்வராஜ் குமரேசன், பாரதி, சபரி சங்கர், திருமுருகன், சதீஷ், சேகர் உட்பட 13 பேர் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமங்கலம் நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.