tamilnadu

img

திருவாரூர் தேர் திருவிழாவிற்காக வெட்டப்படும் மரங்கள்

திருவாரூர், மார்ச் 30- திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான ஆழித்தேரோட்டம் நடைபெறும்.  இந்த ஆண்டிற்கான ஆழித்தேரோட்ட ஏப்ரல் 1அன்று நடைபெற உள்ளது. இதற்காக 4 வீதிகளிலும் தேருக்கு இடையூறாக இருக்கும் மரங்களின் கிளைகள் வெட்ட முடிவு செய்யப்பட்டது.  இதன்படி 4 வீதிகளிலும் உள்ள மரக்கிளைகளை அதிகாரிகள் முன்னிலையில் பணியாளர்கள் வெட்டினர். ஆனால் மரங்களின் கிளைகளை வெட்டாமல் ஒட்டுமொத்த மரத்தையே வெட்டி வருகின்றனர்.  கிளைகள் இல்லாததால், தேரோட்டத்தை காண வரும் மக்கள் நிழலுக்கு ஒதுங்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக தேரின் அடிப்பாகம் 32 அடி உயரம் இருக்கிறது. அதற்கு மேல் தான் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும். 32 அடிக்கு மேல்  உள்ள மரக்கிளைகளை வெட்டினாலே போதும். ஆனால் 10 அடி, 15 அடி உள்ள சிறிய மரங்களை கூட ஒட்டுமொத்தமாக வெட்டி அகற்றிவிட்டனர்.  

நிழல் தருவதை தவிர வேறு என்ன தவறு செய்துவிட்டேன் என்ற எண்ணத்தில் மரங்கள் சோகமாக நிற்பது போல் உள்ளது. தற்போது வெயில் காலம் என்பதால் தேர் இழுக்க வரும் பொதுமக்கள், ஆழித்தேரை காண வரும் முதியோர்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் நிழலை தேடி அலைய வேண்டிய நிலை வந்துவிட்டது.  இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் கூறுகையில், ‘‘அரசு இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்று உறுதியுடன் உள்ளது. ஆனால், அரசு உத்தரவை செயல்படுத்தக்கூடிய அதிகாரிகள் அரசின் உத்தரவை முழுமையாக செயல்படுத்த தவறுகிறார்கள். எனவே, அரசு நேரடியாக தலையிட்டு அரசு உத்தரவை முழுமையாக செயல்படுத்தி இயற்கையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக புதிதாக மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் முயற்சியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.