கோயம்புத்தூர், ஜூன் 19– பூக்களை சிதைத்தாலும் வசந்தம் வருவதை ஒருபோதும் உங்களால் தடுக்க முடியாது என்கிற எழுச்சிகர முழக்கத்தோடு சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சம்மேளனத்தின் 15 ஆவது மாநாடு கோவையில் பேரெழுச்சியோடு துவங்கியது. கோவை சிங்காநல்லூரில் உள்ள சாய் விவாக மஹாலில் மன்னார்சாமி நினைவரங்கத்தில் ஞாயிறன்று அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் எழுச்சி முழக்கத்தோடு துவங்கியது. முன்னதாக மாநாட்டில் சின்னியம் பாளையம் தியாகிகள் ஜோதி, வெண் மணி தியாகிகள் ஜோதி, சேலம் சிறைத் தியாகிகள் ஜோதிகள் தொழிலாளி வர்க்கத்தின் உரிமைக்கான போராட்டத்தின் முன்னத்தி ஏர்களான தோழர்கள் ஜே.ஹேமச்சந்திரன், மதுரை தியாகிகள், திண்டுக்கல் அக்னிஸ் மேரி, பொன்மலை தியாகிகள், பி.ராம மூர்த்தி, வி.பி.சிந்தன், சிங்காரவேலர் ஆகிய தியாகிகளின் ஜோதிகள் ஆகி யவை பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாநாட்டு திடலுக்கு கொண்டு வரப்பட்டன. இதனை ஆயிரக் கணக்கான தொழிலாளர்களின் எழுச்சி முழக்கத்தினடையே தலைவர்கள் பெற்றுக்கொண்டனர். 15 ஆவது மாநில மாநாட்டு கொடியை சங்கத்தின் மூத்த தோழரும், கோவை அரசு போக்கு வரத்து தொழிலாளர் சங்கத்தின் கௌரவத் தலைவருமான பா.காளி யப்பன் ஏற்றிவைத்தார்.
இதனைத்தொடர்ந்து தியாகிகளை நினைவு கூரும் வகையில் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மலரஞ்சலி செலுத்தினர். மாநாட்டிற்கு சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வி.தயானந்தம் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வரவேற்புரை யாற்றினார். மாநாட்டை சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.கே.திவாகரன் துவக்கிவைத்து உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது. மாநாட்டு வேலை அறிக்கையை சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார், வரவு - செலவு அறிக்கையை பொருளாளர் வி.சசி குமார் ஆகியோர் முன்வைத்தனர்.
தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் மாநாட்டில் பொதுக்கருத் தரங்கம், பேரணி, பொதுக்கூட்டம் ஆகியவை நடைபெற உள்ளன. மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள் அரசு போக்குவரத்து ஊழியர்களின் பணி நிலைமை, போராடிப்பெற்ற உரிமைகளை பாதுகாப்பதற்கான முன்னெடுப்பு, பொதுபோக்குவரத்தை பலப்படுத்த வேண்டிய அவசியம், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய தேவைகள் குறித்து இம்மாநாட்டில் விரிவாக விவாதிக்க உள்ளனர். இதனைத்தொடர்ந்து மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட உள்ளன. இம்மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்து 600க்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் பிரதிநிதிகளாக பங்கேற்றுள்ளனர்.