நாகர்கோவில், ஏப்.10- தொடர் விடுமுறை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலா தலங்களில் பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு 3 நாட்களில் 22 ஆயிரத்து 700 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளது. அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக படகுகளை இயக்கி வருகிறது. கடந்த 7ஆம் தேதி முதல் புனித வெள்ளி மற்றும் 9 ல் ஈஸ்டர் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டது. இந்த தொடர் விடுமுறை காரணமாக கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் ஆர்வமுடன் சென்று பார்வையிட்டு வந்தனர். இதில் புனித வெள்ளியான 7 அன்று 6 ஆயிரத்து 800 பேரும், சனிக்கிழமை யன்று 7 ஆயிரத்து 800 பேரும், ஈஸ்டர் பண்டிகை தினமான ஞாயிறன்று 8 ஆயிரத்து 100 பேரும் படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டனர்.
திற்பரப்பு அருவி
உல்லாச குளியலுக்கு பெயர்பெற்ற திற்பரப்பு அருவியில் 3 நாள் தொடர் விடுமுறையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். சிறுவர்கள் பூங்காவில் விளையாடியும் சிறுவர்களுக்கான நீச்சல் குளத்தில் குளித்தும் மகிழ்ந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருகை தந்தனர். இதுபோல் ஆசியாவில் மிகவும் உயரமான மாத்தூர் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் கோட்டை உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.