tamilnadu

img

தோடர் இன மக்கள் புத்தாண்டுக் கொண்டாட்டம்

உதகை அருகே முத்துநாடு மந்தில் தோடர் இன மக்களின் சார்பில் ‘மொற்பர்த்’  என்கிற புத்தாண்டு பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், காட்டு நாயக்கர், பளியர், இருளர், குறும்பர் இன பழங்குடி யின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், தங்களின் பாரம்பரியம், கலாச்சாரம் மாறாமல் இன்று வரை வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்கள் உடை, உணவு முறை, வழிபாட்டு முறை, திருமணம், இறப்பு என தங்களின் அனைத்து  வாழ்வியல் நிலையிலும், தங்கள் முன்னோர்  விட்டுச் சென்ற பாரம்பரியத்தை பின்பற்றுகின்ற னர். இதில் தோடரின மக்கள் உதகை மற்றும் சுற்று  வட்டாரப்பகுதிகளில் தங்களுடைய இனத்தவரு டன் வசிக்கின்றனர். மொத்தமுள்ள 65 மந்துகளில் இரண்டாயிரம் தோடர்கள் நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே வசிக்கின்றனர்.

மொற்பர்த் பண்டிகை

ஆண்டுதோறும் டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ ‘மொற்பர்த்’  என்கிற புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இதில், மாவட்டத்தில் உள்ள தோடரின மக்கள் பங்கேற்று கோலாகலமாக கொண்டாடுவர். இந்தாண்டுக்கான பண்டிகை, தோடரின மக்கள் வசிக்கும் மந்துகளின் தலைமை மந்தான தலைகுந்தா அருகேயுள்ள முத்தநாடு மந்தில் ஞாயி றன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பெரும்பாலான தோடரின மக்கள் கலந்து கொண்டு, முத்தநாடு மந்தில் உள்ள பழமை வாய்ந்த ‘மூன் போ’ மற்றும் ‘அடையாள் ஓவ்’ கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். கோயில் வளாகத்துக்குள் செல்ல ஆண்களுக்கு மட்டுமே அனுமதியுள்ளதால் தோடரின ஆண்கள் தங்கள் பாரம்பரிய உடையணிந்து மண்டியிட்டு வழி பாடு நடத்தினர். எங்கள் வாழ்வு வளம்பெற வேண்டும், எம் மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும், எங்கள் எருமைகள் விருத்தி அடைய வேண்டும் என இறைவனிடம் வேண்டினர்.

ஒவ்வொரு குடும்பத்தினரும் தலைக்கு ஒரு ரூபாய் காணிக்கை செலுத்தினர். ஆண்கள் வழிபாடு நடத்தி முடிந்ததும், பெண்கள் கொண்டாட்டத்தில் இணைந்தனர். பின்,  தங்கள் பாரம்பரிய பாடல்களை பாடியபடி நடன மாடினர். இவர்களை தொடர்ந்து ஆண்கள் நடனமாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். பின்னர், முதியவர்கள் முன் இளைஞர்கள் இளவட்ட கற்களை தூக்கி தங்கள் இளமையை நிரூபித்தனர். இளவட்ட கற்கள் தூக்கும் பழக்கம் தமிழகத்தில் இருந்து மறைந்து விட்ட நிலையில், தோடரின மக்கள் தங்களது பாரம்பரிய விழாக் களில் இளவட்ட கற்களை தூக்கி பாரம்பரியத்தை நிலைநாட்டி வருகின்றனர். இளவட்ட கற்கள் தூக்கும் விளையாட்டு நிறை வடைந்ததும் விருந்து பரிமாறப்பட்டது.

பால், நெய், இனிப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பிரத்யேக உணவு விழாவுக்கு வந்திருந்த அனை வருக்கும் வழங்கப்பட்டது. விருந்தை உண்டதும் பெண்கள் வரிசையாக வந்து முதியவர்களின் பாதங்களை தொட்டு வணங்க, அவர்களது முறைப் படி வலது காலை தூக்கி அந்த பெண்களின் தலை மீது வைத்து ஆசிர்வாதம் செய்தனர். விழா நிறை வடைந்ததும் பிரியாவிடை பெற்று தங்களது சொந்த மந்துகளுக்கு தோடர் மக்கள் புறப்பட்டனர். இந்த விழாவில் தோடரின மக்களின் தலைவர் மந்தேஸ் குட்டன், அடையாள் குட்டன், சத்யராஜ், பீட்ராஜ் மற்றும் தோடரின நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- அமீன்