tamilnadu

img

அடுத்த தலைமுறை முன்னேற்றத்திற்கு தமது அனுபவங்களை அள்ளித் தரும் நூல்

வாழ்க்கையில் வெற்றியாளராக சாதிக்கவேண்டும் என விரும்பும் நபர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிட விசால மனம் படைத்த வெற்றியாளர்கள் தங்களின் அனுபவங்கள் தான் கற்ற அறிவு ஆகியவற்றை எதிர்கால சமுதாயத்தை நல்வழியில் பயணிக்க உதவிடும் மனம் இருந்தால் நாம் வாழும் சமுதாயம் மேலும் சிறப்படையும் அதற்கான பேரார்வம் கொண்ட நல்லி குப்புசாமி செட்டியார் தமது அனுபவங்கள் தான் படித்த புத்தகங்கள் மற்றும் செய்திகள் மூலம் பல நல்ல கருத்துக்களை இந்நூலின் வழியாக மக்களின் மனங்களில் விதைத்துள்ளார். இந்த புத்தகம் படிப்பவர்களை வாழ்க்கையில் முன்னேற்ற பாதைக்கு நிச்சயம் அழைத்து செல்லும் என்பதற்கு இரண்டு கருத்து இருக்கவே முடியாது. பழங்கால கதைகள், பொது அறிவு, அரிய மனிதர்கள், சிறந்த உணவுப் பழக்கங்கள், வெற்றிக்கான வழிமுறைகள் ஆகியவை தனிமனித முன்னேற்றத்திற்கு உதவும் என்பது அவரது  அசைக்கமுடியாத நம்பிக்கை அந்த நம்பிக்கைதான் இந்நூல் வெளிவரக் காரணம் எனலாம்.

ஒருவர் அசாத்தியமான சாதனையை செய்ய வேண்டும் என்றால் அதற்கான முன் தயாரிப்பும் உரிய பயிற்சியும் இருந்தால் சாத்தியமாகும் என்ற கருத்தினை கிரேக்கர்களின் பயிற்சி என்னும் தலைப்பில் மைலோ எனும் பளுதூக்கும் போட்டியில் உலகளவில் சாதனை புரிந்த வீரனின் வாழ்க்கை அனுபவங்கள் மூலம் மிக நேர்த்தியாக விவரிக்கப்பட்டுள்ளது. என்னதான் தொழில் திறன் இருந்தாலும் செய்யும் தொழிலில் லாபம் அடைய மேலும் கூடுதலான அறிவை வளர்த்துக் கொள்வது அவசியம் என்பதை உணர்த்தும் விதமாகவும் தனித்திறன் மேம்படுத்தி லாபம் ஈட்டுவது என்ற தலைப்பில் நமக்கு பயன்தரக்கூடிய கூடுதல் தகவல்களை வழங்கியுள்ளார் நூலாசிரியர்.  நாம் எடுக்கும் முயற்சிக்கு கிடைக்கும் வெற்றியை கொண்டாடுவது மிக அரிதுதான். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் முயற்சிக்கான வெற்றியையும் அதனை கொண்டாட வேண்டிய அவசியத்தையும் அதனால் கிடைக்கும் பலன்களையும் கொண்டாடவேண்டும் என நமக்குக் கற்றுக்கொடுக்கிறார் நூலாசிரியர்.

நமது நாட்டின் தற்போதைய சூழல் திறமையாளர்களை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தி பெரும் வெற்றியடைந்து அதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவது என்பது நடக்கிற காரியமல்ல. இங்கு திறமையாளர்கள் என்பதை விட தமக்கு வேண்டியவர்கள் என்றால் அனைத்து சலுகைகளையும் ஆட்சியாளர்கள் செய்வார்கள் என்பதுதான் இன்றைய நிலையாகும். அரிதாக ஒருசிலரின் சாதனைகள் வெளியில் தெரியும்போதுதான் ஆட்சியாளர்கள் பார்வை அவர்கள் மீதுபடும். இதற்கு உதாரணம் ஈடு இணையற்ற சாதனை வீரர் என்ற தலைப்பில் பிரதீப் என்ற இளைஞன் செய்த சாதனைதான். அதற்காக அந்த இளைஞன் பட்ட துயரங்களை இப்புத்தகத்தில் படித்து உணரலாம். ஆளுக்கொரு மூட்டை, நம்பிக்கை தரும் மனிதர், தலைமைப் பண்பு, தந்தையிடம் கற்ற பாடம், இது கட்டுக்கதையல்ல, இந்த மனம் வேண்டும்,வாழ்வின் மதிப்பு, வெங்காயமும் தக்காளியும் போன்ற ஒவ்வொரு தலைப்பும் படிப்பவர்களுக்கு மனதில் நல்ல கருத்துக்களை விதைக்கும். பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியாரின் ஆழ்ந்த அனுபவம் நமக்கு தரும் பாடங்கள் அதிகம். இந்நூலை படித்து பின்பற்றுபவருக்கு வெற்றிநிச்சயம்.

அள்ளித் தந்த பூமி
ஆசிரியர் : டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்
வெளீயீடு; நன்னூல் அகம்,
11/252-ஏ.பி, ஜே அப்துல்கலாம்
9வது தெரு,
அனு கார்டன், சிக்கராயபுரம்,
 சென்னை 600128
தொலைபேசி: 97910 71218