சென்னை, மார்ச் 27- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 தேர்வு சர்ச்சை தொடர்பாக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்தார். கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட 6 வகையான குரூப்-4 பதவிகளில் வரும் 10 ஆயிரத்து 117 இடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி நடந்தது. இந்த குரூப் 4 தேர்வை தமிழ்நாடு முழுவதும் 18 லட்சத்து 36 ஆயிரத்து 534 பேர் எழுதினர். தேர்வு முடிவு 8 மாதங்க ளுக்கு பிறகு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மார்ச் 24 அன்று வெளியிட்டது. தேர்வர்கள் அவரவர் பெற்ற மதிப்பெண்கள் எவ்வளவு என்பதையும்,ஒட்டு மொத்த தரவரிசையில் எந்த இடம் என்பதையும் சமூகப் பிரிவு தரவரிசையில் எந்த இடம் என்பதையும் விரிவாக டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் குரூப்-4 பதவிகளில் வரும் தட்டச்சர் பிரிவில் காலியாக இருக்கும் 4,500 இடங்களுக்கு தேர்வர்கள் எழுதியிருந்ததில், ‘அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் தரவரி சையில் பின்தங்கியிருப்பதாகவும், குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் தரவரிசையில் முன்னிலையில் இருப்பதாகவும்’ குற்றச்சாட்டு தேர்வர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஒரே பயிற்சி மையத்தில் படித்த சுமார் 2 ஆயிரம் பேர் குரூப்-4 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருப் பதாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்களன்று (மார்ச் 27) கேள்விநேரத்திற்கு, டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு சர்ச்சை எழுந்துள்ளது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் குறிப்பிட்ட சில பயிற்சி மையங்களில் பயின்ற அடுத்தடுத்த பதிவெண் கொண்ட தேர்வர்கள் வெற்றியடைந்துள்ளனர். குறிப்பாக, காரைக்குடி தனியார் பயிற்சி மையத்தில் பயின்ற 700க்கும் மேற்பட்ட தேர்வர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தென்காசியில் ஒரு பயிற்சி மையத்தைச் சேர்ந்த 2000 பேர் தேர்ச்சியடைந்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளதால் தேர்வாளர்கள் மத்தியில் பெரும் குழுப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நாகைமாலி பேசுகையில், “அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியானதில் முதல் 11 இடங்களில் 6 இடங்களை ஒரு குறிப்பிட்ட தேர்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் பிடித்திருக்கிறார்கள். இது எவ்வாறு நடந்தது என்ற சந்தேகம் உள்ளது. எனவே, இதுகுறித்து அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்”என்றார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் சர்ச்சை குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் தேவைப்பட்டால் தற்போது வெளியாகி யிருக்கும் தேர்வு முடிவுகளை ரத்து செய்து மறுத் தேர்வு நடத்த வேண்டும் என்று உறுப் பினர்கள் அருள்(பாமக), டி. ராமச்சந்திரன் (சிபிஐ), வேல்முருகன் (தவாஉக) ஆகியோர் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “குரூப் 4 நில அளவர் தேர்வு முறைகேடு என்ற புகார் எழுந்த வுடனேயே அது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேடு ஏதும் நடந்துள்ளதா? என்பது பற்றி மனித வள மேம்பாட்டுத்துறைச் செயலர் மூலமாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. உரிய விளக்கம் பெற்ற பின்னர் அது பற்றி விரிவாக தெரிவிக்கப்படும்”என்றார். தட்டச்சர் பிரிவில் ஒரு ‘லோயர்’ ஒரு ‘ஹையர்’ வைத்திருந்து அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், இரண்டுமே ‘ஹையர்’ வைத்து, குறைந்த மதிப்பெண்கள் பெற்ற வர்களைவிட தரவரிசையில் பின்தங்கிதான் இருப்பார்கள். இதுதான் தட்டச்சர் மதிப்பெண் முன்னுரிமையாகும்.
குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 8 மையங்களில் தேர்வு நடத்தப் பட்டது. அதில், முதல் 500 நபர்களில் 27 பேரும் அடுத்த 1000 பேரில் 45 நபரும், 10 ஆயிரம் நபர்களில் 397 பேரும் தேர்ச்சி பெற்றிருக் கிறார்கள். குரூப்-4 மதிப்பெண் கணக்கீட்டு பணிகள் மென்பொருள் மூலம் மேற்கொள்ளப் பட்டு, அதிகாரிகள் மூலமாக நேரடி சரிபார்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. எனவே இதில் எந்தவிதமான தவறும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அதிக காலம் எடுத்துக் கொண்டு சரியான முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதால் தவறு நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். நில அளவையர், வரைவாளர் பதவிகளில் உள்ள 1,089 காலி இடங்களுக்கான தேர்வில் காரைக்குடி மையத்தில் மட்டும் 700 பேர் தேர்வாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 80 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் குறிப்பிட்ட ஒரே மையத்திலிருந்து தேர்வாகியுள்ளதாக புகார் எழுந்தது. குழப்பங்கள் நடைபெற்றி ருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முன்னதாக இதுபோன்ற தேர்ச்சி உள்ளதா என ஒப்பிட்டு அறிக்கை அளிக்க உத்தர விடப்பட்டுள்ளது. டின்பிஎஸ்சி நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டி யுள்ளது. இதனை பல முறை நான் தெரிவித் திருக்கிறேன். இதற்காக ஒரு அரசாணை (அவுட்சோர்சிங்) வெளியிடப்பட்டது. அன் றைக்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், குருப் 2 தேர்வு நடத்த ஏற்கெனவே ஒதுக்கிய தொகையைக்காட்டிலும் ரூ.45 கோடி தேவை என்று ஒரு கோப்பு அனுப்பிவைத்தனர்.
7 ஆயிரம் பணியிடங்களுக்கு 24 லட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள். இத்தனை பேருக்கும் வினாத்தாள், விடைத்தாள் அச்சடிக்க வேண்டும். 100 கோடிதாள் அச்சடிக்கப்பட வேண்டும். 2,400 மையங்களை இதற்காக தயார் செய்ய வேண்டியுள்ளது. தேர்வை கண்காணிக்கவும், நடத்தவும் குறைந்தது 7 ஆயிரம் பேர் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கு தலா ரூ. 500 வழங்க வேண்டும். ஒரே நாளில் 24 லட்சம் பேருக்கு தேர்வு நடத்துவது இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் திறனற்ற வழிமுறைகளாகும். அரசு வேலைகளில் தற்காலிகமாக பணியாற்றுபவர்கள் மிகக் குறைவாக 5 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். அதே வேலையில் நிரந்தர பணியாளர்கள் லட்சங்களில் சம்பளம் வாங்குகின்றனர். இது நியாயம் அல்ல. எனவே தான் அவுட் சோர்சிங் மூலம் ஊழியர்களை நியமித்து அவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கி இபிஎஃப், இஎஸ்ஐ ஆகியவற்றில் சேர்க்க வேண்டும் என்று கூறி அரசாணை கொண்டு வந்தோம். ஆனால் எதிர்கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. சமூக நீதிக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறினர். எனவே தான் அரசுப்பணிகளை அவுட்சோர்சிங் விடுவது குறித்து சீர்திருத்தம் செய்யவேண்டியுள்ளது என்ற விபரீத யோசனையுடன் இதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு கொடுங்கள் என்று நிதியமைச்சர் கேட்டுக்கொண்டார்.