திருப்பூரில் நடைபெற்ற நவம்பர் புரட்சி தின விழா - தோழர் என்.சங்கரய்யா நூற்றாண்டு - தீக்கதிர் சந்தா அளிப்பு விழா நிகழ்வின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர் வேல்முருகனின் மகன் உதயசங்கர், தனது 14வது பிறந்த நாளுக்காக உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தில் தீக்கதிர் ஆண்டுச்சந்தாவுக்காக 2ஆயிரம் ரூபாயை, தீக்கதிர் முதன்மைப் பொது மேலாளர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமனிடம் அளித்த காட்சி.
திருப்பூர் மாவட்டத்தில் தீக்கதிர் நாளிதழ் இந்த ஆண்டு சந்தா சேர்ப்பு இயக்கத்தில் மூன்றாயிரத்து நூற்றுக்கும் மேற்பட்ட சந்தாக்களை சேர்த்து, நிர்ணயித்த இலக்கை தாண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் பெருமிதமான பணியை நிறைவேற்றியுள்ளனர். இம்மாவட்டத்தில் கடந்த 23 ஆண்டுகளாக தொடர்ந்து தீக்கதிர் சந்தா சேர்ப்பு பணியை சிறப்புடன் நிறைவேற்றி மாநிலத்தில் முதன்மை இடத்தை தக்க வைத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட ஒரு மாத காலத்தை ஒதுக்கி கட்சியின் மாவட்டத் தலைவர்கள் முதல் கிளை ஊழியர்கள் வரை நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் மக்களைச் சந்தித்துத் சந்தா சேர்ப்பில் ஈடுபடுகின்றனர். இந்த ஆண்டு அக்டோபர் - நவம்பரில் சந்தா சேர்ப்பு இயக்கம் திட்டமிடப்பட்டது. சந்தா சேர்ப்பு என்பது தீக்கதிர் எண்ணிக்கை யை அதிகரிப்பதாக மட்டும் இல்லாமல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடைக்கோடி கிராமத்து உழைப்பாளி மக்கள் முதல் சமூகத்தின் பல தரப்பினரையும் சந்தித்து அவர்கள் கருத்து களை அறிந்து கொள்ளும் ஒரு அரசியல் நிகழ்வாக வும் உள்ளது.
இந்த ஆண்டு சந்தா சேர்ப்பு இயக்கம் ஒருவித தயக்கத்துடன் தொடங்கி, சென்ற இடங்களில் கிடைத்த வரவேற்பில், மிகுந்த உற்சாகத்துடன் இலக்கை எட்டியது. கொரோனா இரண்டு அலைகள் தாக்கி, பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு மக்களி டம் கையில் காசு இல்லை, தொழில் சிரமம் என்ற நிலையில், சந்தா சேர்க்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது தான் தயக்கத்துக்கு காரணம். சாமானிய உழைப்பாளி மக்களுக்கு ரூ.2000 என்பது பெரிய தொகை. கடும் பொருளாதார சிர மங்களைச் சந்தித்து வரும்போது எப்படி தரு வார்கள் என்ற மனநிலையுடன் தான் கட்சி ஊழி யர்கள் பணியைத் தொடங்கினர். ஆனால், தீக்கதிர் சந்தா சேர்ப்புக்கு வரு கிறோம் என்றவுடன் மிகப் பெரும்பாலோர் இன்முகத் துடன் வரவேற்பு கொடுத்து உடனடியாக ஒப்புக் கொண்டனர்.
தங்களுக்கு பல சிரமங்கள் இருந்தா லும், அதையும் தாண்டி தீக்கதிர் அவசியம் வாங்க வேண்டும் என்ற உணர்வுடன் சந்தா தொகை கொடுத்ததை கண்கூடாகப் பார்க்க முடிந்தது. இதில் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஏராளமான அனுபவங்கள் கிடைத்தன. மதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்.டி.மாரியப்பன் தொடர்ந்து தீக்கதிர் வாங்கிப் படித்து வருபவர். எப்போதும் மாதச் சந்தாவாக வாங்கி வந்தவர், இம்முறை தோழர்கள் அணு கியபோது, நேர்மையான கலாச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் மார்க்சிஸ்ட் கட்சியின் நாளிதழ் தீக்கதிர் தொடர்ந்து முன்னேற வேண்டும் எனச் சொல்லி மனமுவந்து ஆண்டுச் சந்தாவாக போட்டுக் கொள்ளுங்கள் எனச் சொல்லி பணத்தைக் கொடுத்தார். இது போல் பல்வேறு அர சியல் கட்சிகளின் நிர்வாகிகள், பிரமுகர்களும் சந்தா செலுத்தினர். தீக்கதிரில் வரும் தெளிவான, உண்மைச் செய்திகளை வேறெந்த ஊடகத்திலும் தெரிந்து கொள்ள முடிவதில்லை என்று பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
திருப்பூர் மாநகரத்தில் மட்டுமின்றி, இம்மாவட்டத்தின் கிராமப்புறங்களிலும் பரவலாக கூடுதல் தீக்கதிர் சந்தா சேர்க்கப்பட்டுள்ளது. திருப்பூர் ஓடக்காடு, வெள்ளியங்காடு உள்ளிட்ட ஒவ்வொரு பகுதிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சந்தா சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் உடுமலை பேட்டை குரல்குட்டை கிராமம் மற்றும் திருப்பூர் இடுவாய் ஊராட்சி, பெருமாநல்லூர் ஊராட்சி, அங்கேரிபாளையம், வெங்கமேடு, வாவிபாளை யம், குமரன் காலனி, பெரியாண்டிபாளையம், குமரானந்தபுரம், கருவம்பாளையம் பகுதி, ராக்கியா பாளையம் பிரிவு, அவிநாசி டவுன், திருமுருகன் பூண்டி, வேலாயுதம்பாளையம் கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் தலா 50க்கும் மேற்பட்ட சந்தா சேர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிளையும், ஒவ்வொரு உறுப்பின ரும் தீக்கதிர் வாங்குவது என்று தீர்மானித்து சில கமிட்டிகளில் புது முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி நெருப்பெரிச்சல் சமத்துவபுரம், கணக்கம் பாளையம் உள்ளிட்ட கிளைகளில் அனைத்து உறுப்பினர்களும் சந்தா சேர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும் உழைப்பாளிகள் தான், வசதி படைத்த வர்கள் அல்ல! வேறு சில நடுத்தர அரங்கங்களில் வேலை செய்வோர் தங்களுக்குப் போக கூடுதலாக ஒன்றிரண்டு சந்தா செலுத்தி அருகாமை தேநீர் கடை, சலூன்களில் போடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். பெண்கள் தீக்கதிர் வாசித்துப் பழகிய வீடுகளில் சந்தா புதுப்பிப்பதில் மிகவும் ஆர்வமுடன் ஒப்புக் கொண்டனர். தீக்கதிர் வாங்கும் கட்சி தோழர்களின் வீடுகளில் பெண்கள் மட்டுமின்றி, அடுத்த தலைமுறை இளைஞர்களும் படித்துப் பழகிய அனுபவமும் உள்ளது.
தீக்கதிர் தொடர்ந்து வாசிக்கும் வழக்கறிஞர் ஒருவர், இதில் வரும் கட்டுரைகள், முக்கியச் செய்தி களைப் படிக்கும் போதுதான் அதன் சட்டரீதியான அம்சங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது என்று சொல்லி, சந்தாவை புதுப்பித்துக் கொண்டார். சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் பெரியகடை வீதி உள்ளிட்ட தெற்குப் பகுதியில் சந்தா சேர்ப்புக்கு சென்றபோது ஏற்கெனவே தீக்கதிர் வாங்குவோர் புதுப்பித்துக் கொண்டதுடன், புதிதாக 6 சந்தாவும் சேர்த்துக் கொடுத்தனர். இந்தியாவில் சிறுபான்மை மக்கள் மீது தொடுக்கப்படும் தாக்கு தல்கள் மற்றும் உரிமை பறிப்பு தொடர்பாக வேறு எந்தப் பத்திரிகையிலும் தீக்கதிர் போல் செய்தி வரு வதில்லை என்று சொல்லி புதிதாக சந்தாசேர்ந்தனர். கிராமப்புறமான ருத்ராபாளையம் கிளையில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் கிராமப்புற உழைப்பாளிகள் ஆவர். தீக்கதிர் கட்டு காலையில் வந்தவுடன் விநியோகிப்பாளர் இன்றி, இவர்களே நேரடியாக வந்து தீக்கதிர் நாளிதழை எடுத்துச் செல்கின்றனர். இவர்கள் அனைவரும் தற்போது சந்தா புதுப்பித்துக் கொண்டனர்.
சமீபத்தில் ஜவுளித் தொழிலுக்கு ஆதாரமான நூல் விலை உயர்வு தொடர்பாக தீக்கதிரில் வந்த சிறப்புக் கட்டுரை ஒட்டுமொத்த திருப்பூர் தொழில் துறையினரின் கவனத்தைப் பெற்றதுடன், அதற்கு எதிராக வேலைநிறுத்தம், கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றதிலும் தீக்கதிரில் வந்த மைய மான கருத்துகள் எதிரொலித்ததைக் காண முடிந்தது. திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி மற்றும் சிறு, குறு, நடுத்தர உற்பத்தியாளர்கள் பலர் தீக்கதிர் சந்தாதாரர்களாக தொடர்ந்து வருகின்றனர். அங்கேரிபாளையம் பகுதியில் ஒரு கிளையில் மூத்த தோழர் பெருமாள் நீண்ட கால தீக்கதிர் வாசகர். அவர் கடந்த இரு ஆண்டுகளாக உடல்நலக் குறைவு காரணமாக வீட்டிலேயே இருக்கும் நிலை உள்ளது. நாள் தவறாமல் தீக்கதிர் நாளிதழை முழுமையாக வாசித்து விடுவார். வருமானமும் இல்லாத நிலை யில், அவர் சார்ந்த கட்சி கிளைத் தோழர்களே அவருக்காக ஆண்டு சந்தா கட்டி அவர் வீட்டுக்கு தீக்கதிர் வரவழைக்க ஏற்பாடு செய்துள்ளனர். இது போல் சொல்வதற்கு ஏராளமான அனுபவங்களு டன் இந்த சந்தா இயக்கம் நடைபெற்றுள்ளது. தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு விழா நடைபெற்ற போது, கட்சி உறுப்பினர் வேல்முருகன் மகன் உதயசங்கர் தனது 14ஆவது பிறந்தநாளுக்கு உண்டியலில் சேமித்து வைத்த தொகை ரூ.2 ஆயிரத்தை தீக்கதிர் சந்தாவுக்காக மேடையில் வழங்கினார்.
சென்ற இடங்களில் எங்கும், தீக்கதிர் நாளிதழ் வேண்டாம் என்று ஒருவர் கூட சொல்லவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து மேற்கொண்டு வரும் மக்களுக்கான எண்ணற்ற போராட்டங்கள், கொரோனா காலத்தில் செய்த அர்ப்பணிப்பு மிக்க, உயிர் காக்கும் சேவை ஆகி யவை மக்களின் நன்மதிப்பைப்பெற்றுள்ளன. அத்துடன், இன்றைய சூழலில் கம்யூனிஸ்ட்டுகளின் அரசியல் பணி கட்டாயம் தேவை என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தீக்கதிர் சந்தா சேர்ப்பில் கிடைத்த உற்சாகமான வரவேற்பும், நாளிதழ் எண்ணிக்கை அதிகரிப்பும் அதை உறுதிப்படுத்தியது. நிர்ணயித்த இலக்கை நிறைவேற்றினாலும், தீக்கதிர் சந்தா சேர்க்கும் பணி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் மக்க ளோடு மக்களாக உள்ள உயிர்ப்பான தொடர்பின் அடையாளமாக தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்க வெற்றி அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.
- வே.தூயவன்