tamilnadu

img

மதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்?

முதலமைச்சர் விளக்க வேண்டும்  : சு.வெங்கடேசன் எம்.பி. வேண்டுகோள்

மதுரை,ஜூலை 9- மதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன் என்று தமிழக முதல்வர் விளக்க  வேண்டும் என்று சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ்  தொற்றுக்கு மதுரையில்  இருமடங்கு  மரணங்கள் நிகழ்வது ஏன்? என்று  கேள்வி எழுப்பியுள்ள மதுரை  மக்களவை உறுப்பினர்  சு.வெங்கடேசன்,  இதுகுறித்து முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என்று வலி யுறுத்தியுள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

மாநில அரசு, கொரோனா தொற்றுக்கு எதிராக மதுரை யிலும் பிற தென்மாவட்டங்களிலும் எடுத்துவரும் நடவடிக்கை கள் மிகவும் கவலையளிப்பதாக உள்ளன. இதனைப் பல முறை சுட்டிக்காட்டிய பிறகும் அரசு தனது அணுகுமுறை யை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லாதது வருத்த மளிக்கிறது.

சென்னையில் தொற்றால் பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை 3000 ஆகவும் இறந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆகவும் இருந்தபோது மதுரையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக இருந்தது. சென்னையில் தொற்றுபாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை 5000 ஆகவும் இறந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆகவும் இருக்கும்போது மதுரையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 86 ஆக இருக்கிறது.

ஒரே நோய், சென்னையைவிட மதுரை யில் இரண்டு மடங்கு இறப்பினை நிகழ்த்து வது எதனால்? கொரோனாவுக்கு மதுரை யின் மீது அவ்வளவு கோபம் ஏன்? இதனை கொரோனாவால் நிகழும் மரணமாக  மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது. அதனைக் கையாள்வதில் இருக்கும் நிர்வாகப் போதாமையாலும் கவனமின்மையாலும் நிகழும் மரணமாகவே எடுத்துக்கொள்ள முடியும்.

ஆம்புலன்ஸ்களை திரும்ப அனுப்பாததேன்

உதாரணமாக சென்னையில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்தவுடன் பிற மாவட்டங்களில் இருந்த ஆம்புலன்ஸ்கள் வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டன. மதுரையிலும் அதனைச் சுற்றியுள்ள ஐந்து மாவட்டங்களிலும் இருந்து சுமார்  40 ஆம்புலன்ஸுகளும் ஏறக்குறைய 200 ஊழியர்களும் சென்னைக்கு அனுப்பப்பட்டனர். அவசரத் தேவைக்காக அதனைச் செய்ததில் தவறில்லை. ஆனால், கடந்த இரு வாரங்களாக மதுரையில் தொற்று  எண்ணிக்கை பலமடங்காக அதிகரித்துள்ளது. இப்பொழுது தென்மாவட்டங்கள் முழு வதும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. ஆனால் சென்னைக்கு  அனுப்பப்பட ஆம்புலன்ஸுகளும் ஊழியர்களும் ஒரு மாதமாகியும் திரும்ப அனுப்பப்படவில்லை.

கிருமி நீக்கம் செய்யாமலே...

இதனால் மதுரையில் கடும்பாதிப்பினை மக்கள் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். நோய்த்தொற்றா ளர்களுக்கு ஆம்புலன்ஸ் கிடைக்க நான்கு முதல் ஐந்து மணி நேரமாகிறது. முன்னிரவில் போன்செய்தால் காலையில்தான் வண்டி வருகிறது. ஆம்புலன்ஸ் தேவைக்காக போன்செய்பவர்கள் பல மடங்காக அதிகரித்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸுகளோ ஏற்கனவே இருந்ததைவிடக் குறைவாகத்தான் இயக்கப்படுகின்றன. சக்கிமங்கலத்தில் இருக்கும் ஒரு நோயாளிக்காக எழுமலையில் இருந்து வண்டி வருகிறது. தொற்றுபாதித்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் அதே வண்டி, கிருமிநீக்கங்கூட செய்யப்படாமல், தொற்றிலிருந்து குணமடைந்தவர்களை ஏற்றிச்செல்லும் நிலைகூட சிலநேரங்களில் ஏற்படுவதாகச் சொல்லப்படுவது அச்சமளிக்கிறது.

ஆம்புலன்ஸ் பிரச்சனை மிகமிக அடிப்படையானது. ஆனால் இதனை மாநில அரசு முறையாகக் கையாளவில்லை. சென்னைக்குத் தேவையான ஆம்புலன்ஸுகளுக்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்துவிட்டு. பிற மாவட்டங்களிலிருந்து எடுக்கப் பட்ட ஆம்புலன்ஸ்களை உடனடியாக அந்தந்த மாவட்டங்களுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும்.

சோதனைகளை அதிகரிக்க...

அதேபோல சோதனை மேற்கொள்வதில் பெரும் அலட்சியப்போக்கு நிலவுகிறது, மதுரையில் நாள் தோறும் 500க்கும் குறைவாகவே சோதனைகள் நடந்தன. கடுமையாகத் தலையீடு செய்த பின்னர் அதனை 1500 அக உயர்த்தினர். தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறோம், இப்பொழுது நாள்தோறும் 2100 என்ற எண்ணிக்கையில் மட்டுமே சோதனை நடத்தப்படுகிறது. குறைந்தபட்சம் நாள்தோறும் 3000 சோதனையை நடத்தினால் மட்டும் மதுரையில் பரவும் தொற்றின் வேகத்தினைக் கட்டுப்படுத்த முடியும். சென்னையில் நிகழ்ந்ததைவிட இரு மடங்கு மரணங்கள் மதுரையில் நிகழ என்ன காரணம்? நோயாளிகளைக் கண்டறிவது, அவர்களை உரிய முறையில் மருத்துவமனைக்குக் கொண்டுசேர்ப்பது, அவர்களுக்குத் தேவையான சிகிச்சையைக் கொடுப்பது ஆகியவற்றில் எதில் பிரச்சனை இருக்கிறது. அதனைச் சரிசெய்ய மாநிலஅரசு செய்யும் முயற்சிகள் என்ன என்பதை முதல்வர் விளக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.