tamilnadu

img

இப்படியாகத்தான் வந்தது இல்லந்தேடிக் கல்வி - இரா.எட்வின்

ஆச்சரியமாக இருந்தது. உள்ளது உள்ளபடி சொல்வதெனில் மயக்கத்தைக் கொண்டுவருமளவு ஆச்சரியமாக இருந்தது. 2012 இல் வெறும் 290 என்ற அளவில் குழந்தைகளின் எண்ணிக்கையைக் கொண்டிருந்த ஒரு அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் இன்றைய குழந்தைகளின் எண்ணிக்கை 947 என்பது. அதேபோன்றதொரு அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியனான எனக்கு நிச்சயமாக மயக்கத்தைக் கொடுக்கக் கூடிய செய்தியாகத்தான் இருந்தது. ஆனால் என் முன்னே அமர்ந்து இந்தச் செய்தியை சொல்லிக் கொண்டிருந்த அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ஜோதி முருகன் அவர்கள் முகத்தில் எந்தவிதமான சலனமும் இல்லை. அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது  .

நூறு ஆண்டுகள் வரலாறு கொண்ட மிகப் பெரிய பள்ளிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் எனில்.  2012 இல்  947 எண்ணிக்கையில் குழந்தைகளைக் கொண்டிருந்த அரசு உதவிபெறும் பள்ளிகளில் பல  2022 இல் 290 எண்ணிக்கை அளவிற்கு வேண்டுமானால் இறங்கி இருக்கும். 290 என்பது 947 ஆனது எப்படி? கேட்டுவிட்டு என்னையறியாமல் கைகளைக் கட்டிக்கொண்டு ஒரு மாணவனைப்போல அவரை நோக்குகிறேன். அது புலியூர் காகித ஆலையின் “இராணி மெய்யம்மை பள்ளி”. செல்வம் கொழிக்கும் பள்ளி. ஆனால் பணம் மட்டுமே குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு வந்துவிடாது.

ஏதோ ஒன்று நடந்திருக்கிறது.

1) பணத்தை வாரி வாரி செலவுசெய்ய நிர்வாகம் முன்வந்திருக்க வேண்டும்.
2) நல்லதொரு திட்டத்தோடு நிர்வாகத்தை அந்தத் தலைமையாசிரியர் அணுகியிருக்க வேண்டும்.
3) அர்ப்பணிப்போடு ஆசிரியர்கள் களத்தில் இறங்கி இருக்க வேண்டும்.
4)  பெற்றோர்கள் ஒத்துழைத்திருக்க வேண்டும். அந்தப் பள்ளியின் அன்றைய தலைமை ஆசிரியர் நிர்வாகத்தை அணுகி,
1) தினமும் 5000 லிட்டர் மினரல் தண்ணீர்.
2) அனைத்துக் குழந்தைகளுக்கும் மதியம் சாம்பார், மோர், கூட்டு இவற்றோடு தினமும் ஒரு இனிப்பு.இவற்றைக் கேட்டிருக்கிறார்.

நிர்வாகம் தந்திருக்கிறது.

அரசு வழங்கிய 20 ஆசிரியர்களோடு 10 ஆசிரியர்களுக்கு நிர்வாகம் ஊதியம் வழங்கி வருகிறது. நிர்வாகம் வாரித் தருகிறது. குழந்தைகள் வகுப்பறைகளை நிரப்புகிறார்கள். ஆசிரியர்கள் மரங்களை வைத்து கொண்டாடித் தீர்க்கிறார்கள். ஒரு பள்ளி வளாகத்தில் 5000 மரங்கள். அவர்முன் மண்டியிட்டு வணங்கிவிடத் தோன்றுகிறது.  கொரோனா காலம் முழுவதும் இருவர் இருவராக 15 ஃபீடிங் புள்ளிகளுக்குப் போகிறார்கள். குழந்தைகளைக் கூட்டுகிறார்கள். சமூக இடைவெளியில் கறாராக இருக்கிறார்கள்.  வருகிற குழந்தைகளோடு பாடுகிறார்கள், ஆடுகிறார்கள், கதை சொல்கிறார்கள்.  பயனற்றதாகக் கருதப்படும் தாள்களில் பொருட்களை செய்வதற்கு கற்றுத் தருகிறார்கள். குழந்தைகள் ஓவியம் வரைகிறார்கள்  அவற்றை ப்ரேம் செய்து சுவரில் மாட்டி வைக்கிறார்கள்.  தாளிகளில் செய்த பொருட்களை ஒரு அறையில் பார்வைக்கு வைக்கிறார்கள்.

இந்தச் செயலுக்கு இந்தப் பள்ளி “இல்லந்தேடிக் கல்வி” என்று பெயர் வைக்கிறது. இந்த செயலுக்கு விருதளித்து கௌரவிக்கிறது கரூர் மாவட்ட “தமிழ்நாடு அறிவியல் இயக்கம்” 13.06.2021 ஞாயிறன்று அந்தப் பள்ளிக்கு வருகிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர். நான் வியந்ததைவிட அதிகமாக வியந்திருக்கிறார் அமைச்சர். தமிழ்நாட்டிற்கு “இல்லந்தேடிக் கல்வி” வருகிறது.  அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரிய நண்பர்கள், நிர்வாகம், குழந்தைகள், பெற்றோர். அனைவரையும் மெய்சிலிர்க்க கையெடுத்து வணங்கிக் கொள்கிறேன்.