tamilnadu

img

வடக்கனந்தல் பேரூராட்சியில் 580 வேலை அட்டை வழங்கல்

மதுரை, ஜூலை 26- வடக்கனந்தல் பேரூராட்சியில் 580 பேருக்கு வேலை அட்டை வழங்கப்பட்டது. மேலும் 10 நாட்களில் மொத்தக் கூலியும் கொடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 24 மணி நேர காத்திருப்பு போராட்டம் நிறைவுபெற்றது. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில், 2021-இல் தமிழ்நாடு அரசு நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை அறிமுகம் செய்து பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்தது. இதற்கான திட்ட வடிவங்களை மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செப்டம்பர் 13 அன்று அரசாணையாக வெளியிடப்பட்டது.  இதில், சென்னை மாநகராட்சியில் இரண்டு மண்டலங்களும், மாநிலத்தில் 14 மாநகராட்சியில் ஒரு மண்டலமும், 7 நகராட்சியில் ஒரு மண்டலமும், 37 மாவட்டங்களில் தலா ஒரு பேரூராட்சியும் தேர்வு செய்யப்பட்டு, நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் கட்டமைப்பு, பற்றாக்குறை, ஏழ்மை ஆகிய தரவுகளின் அடிப்படையில் வேலை கொடுக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக அரசு நிதி ஒதுக்காததால் வேலை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நகர்ப்புற ஏழை, எளிய மக்கள் கடும் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டு, வேலையின்றி, வருமானம் இன்றி வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.  எனவே, நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு தமிழக அரசு 1000 கோடி நிதி ஒதுக்கி தொடர்ந்து வேலை கொடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலக்குழு 24 மணிநேரம் காத்திருப்புப் போராட்டம் நடத்த அறைகூவல் விடுத்தது. 

இதனடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், வடக்கனந்தல் பேரூராட்சியில் வட்டத் தலைவர் பழனி தலைமையில் போராட்டம் செவ்வாயன்று தொடங்கியது. தொடர் மழையிலும் இரவு, பகலாக 24 மணி நேரம் போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்தின் நிறைவாக புதனன்று அதிகாரிகளோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 580  பேருக்கு  உடனே வேலை அட்டை கையில் கொடுக்கப்பட்டது. வேலை செய்து 8 மாதம் ஆகியும், கொடுக்கப்படாத கூலியை 10 தினங்களில் மக்களுக்கு கொடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதனடிப்படையில் போராட்டம் நிறைவு செய்யப்பட்டது. மேலும் வேலையை துவக்கக் கோரி அதிகாரிகளிடம் மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுப்பிரமணி, மாநிலக்குழு உறுப்பினர்  அ.பா.பெரியசாமி, சிபிஎம் வட்டச் செயலாளர், மாரிமுத்து, கிளை செயலாளர் முருகன், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன், மாவட்டத் தலைவர் சிவக்குமார் பங்கேற்றனர்.