சென்னை,மார்ச் 1- தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களை படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் செவ்வாயன்று (மார்ச் 1) தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இலச்சினையையும் அவர் வெளியிட்டார். மேலும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டிப் பாடநூலை வெளியிட்டு, இதற்கென உருவாக்கப்பட்டுள்ள naanmudhalvan.tnschools.gov.in என்ற இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்குப் பத்து லட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனை யில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதலாகும். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பதாகும். தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சிக் கேற்ப பள்ளி மாணவர்க ளுக்கு கோடிங் மற்றும் ரொபாடிக்ஸ் போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த சாதனையா ளர்களைக் கொண்டு கோடை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். இவற்றைத் தவிர, மனநல மருத்துவர்கள், உடல்நல மருத்துவர்களைக் கொண்டு திடமான உணவு வகைகள் உட்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்குவதுடன், உடற்பயிற்சி, நடை, உடை, நாகரீகம், மக்களோடு பழகுதல், ஆகியவை குறித்தும் பயிற்சி கள் வழங்கப்படும். தமிழ்ப் பண்பாடு, மரபு குறித்த விழிப்புணர்வும் மாணவ, மாணவியர்களிடம் ஏற்படுத்தப்படும்.