tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு எழுச்சியுடன் தொடக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது மாநில மாநாடு மதுரை மாநகரில் தோழர் கோ.வீரய்யன் வளாகத்தில் தோழர்கள் கே.வரதராசன், ஏ.அப்துல் வகாப், தே.லட்சுமணன், கே.தங்கவேல் ஆகியோர் நினைவரங்கில் (ராஜா முத்தையா மன்றம்) புதனன்று எழுச்சியுடன் தொடங்கியது.
மாநாட்டு வளாகத்தில் தாரை தப்பட்டை முழங்க, கூடியிருந்தவர்களின் விண்ணதிரும் எழுச்சி முழக்கத்திற்கு இடையே மாநாட்டு கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த மாநில மாநாடு நடைபெற்ற தூத்துக்குடியில் இருந்து கொண்டு வரப்பட்ட செங்கொடியை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஏற்றி வைத்தார்.
இதைத் தொடர்ந்து தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் எம்.ஏ.பேபி, ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்பட மாநாட்டு பிரதிநிதிகள், பார்வையாளர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தி மாநாட்டு அரங்கிற்குள் நுழைந்தனர்.
பொது மாநாட்டிற்கு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமை வகித்தார். மதுரை மக்களவை உறுப்பினரும், மாநாட்டு வரவேற்புக்குழு தலைவருமான சு. வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.
மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமை உரை ஆற்றினார். கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசினார்.
முன்னதாக, புதிதாக மேம்படுத்தப்பட்ட தீக்கதிர் செயலியை (ஆப்) பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அறிமுகம் செய்து வைத்தார்.
இதில் மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், ஏ.கே.பத்பநாபன்,  பி.சம்பத், அ.சவுந்தரராசன், சுதா சுந்தரராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநாடு நடைபெற்ற பகுதி மட்டுமின்றி மாநகரின் பல்வேறு பகுதிகளிலும், நகரில் உள்ள பாலங்களிலும் செங்கொடிகள் கட்டப்பட்டு செம்மயமாக காட்சியளித்தது.
நாம் வெல்லுவோம்
கதிரவனை  காண்பதற்கு கைவிளக்கு எதற்கு, கம்யூனிஸ்ட்டுக்கள் பெருமை சொல்ல வார்த்தையில்லை என்று பாடலும், உலகம் உழைப்பாளிகளின் தேசம் அதை உரக்க பாடுவோம் புதிய உலகம் படைத்து இனி வெல்லுவோம் என்ற பாடலுடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பித்தது.
மாநாடு நடைபெற்ற அரங்கத்தின் நுழைவாயிலில் கார்ல் மார்க்ஸ் உருவச் சிலை எழிலுடன் அமைக்கப்பட்டிருந்தது. செம்பதாகையின் பின்புலத்தில் அமைக்கப்பட்டிருந்த மார்க்ஸ் சிலை காண்போரை வெகுவாக கவர்ந்தது. அங்கு வந்திருந்தவர்கள் பலரும் மார்க்ஸ் சிலையுடன் அலைபேசியில் செல்பி எடுத்துச் சென்றனர்.