மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவு நாளான மார்ச் 23 அன்று கொடி நாளாக அறிவித்து தமிழகம் முழுவதும் செங்கொடி ஏற்றப்பட்டது. மதுரை மேற்கு -2 ஆம் பகுதிக்குழுவில் ஜெய்ஹிந்த்புரம் மெயின்ரோடு வீரகாளியம்மன் கோவில் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செங்கொடியை ஏற்றிவைத்தார். மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ம. பாலசுப்பிரமணியம், பகுதிச் செயலாளர் ஏ. எஸ். செந்தில்குமார் ,பகுதிக்குழு உறுப்பினர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சிபிஎம் மாநில மாநாடு மதுரையில் கொடியேற்றி எழுச்சிக்கோலம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 23வது மாநாடு மதுரையில் இராஜா முத்தையா மன்றத்தில் மார்ச் 30, 31, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் பேரெழுச்சியுடன் நடைபெறுகிறது. மாநாட்டின் முன்னோட்டமாக மார்ச் 23 பகத்சிங் நினைவு தினத்தன்று தமிழகம் முழுவதும் செங்கொடி ஏற்றி கொடிநாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி மதுரை மாநகரிலும் புறநகர் மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கான மையங்களில் செங்கொடி ஏற்றும் நிகழ்வுகள் நடைபெற்றன. மதுரை ஜெய்ஹிந்த்புரத்தி லும் தீக்கதிர் அலுவலக வளாகத்திலும் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செங்கொடியை ஏற்றி வைத்தார். கட்சியின் மாநாட்டு நிகழ்ச்சி நிரல் குறித்து அவர் கூறியதாவது: கட்சியின் மாநில மாநாட்டையொட்டி மார்ச் 29 செவ்வாயன்று மாலை 4 மணி அளவில் தோழர் மைதிலி சிவராமன் நினைவரங்கில் செங்கொடி இயக்க வரலாற்றுப் படக்காட்சி துவங்குகிறது. இக்கண்காட்சியை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி திறந்து வைக்கிறார்.
மார்ச் 30 அன்று புதன் காலை 8 மணி முதல் மதுரை இராஜா முத்தையா மன்றத்தில் இசைநிகழ்ச்சி யுடன் தொடக்க நிகழ்வு துவங்குகிறது. மாநாடு நடைபெறும் வளாகத்திற்கு கட்சியின் மறைந்த முதுபெரும் தலைவர் தோழர் கோ.வீரய்யன் அவர்களது பெயர் சூட்டப்பட்டுள்ளது. மாநாடு மறைந்த தலைவர்கள் கே.வரதராசன், ஏ.அப்துல்வஹாப், தே.இலட்சுமணன், கே.தங்கவேல் நினைவரங்கில் நடைபெறுகிறது. மாநாட்டுக் கொடியை மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஏற்றி வைக்கிறார். இதைத்தொடர்ந்து நடைபெறும் பொது மாநாட்டிற்கு மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையேற்கிறார். வரவேற்புக்குழு தலைவர் சு.வெங்கடேசன் எம்.பி., வரவேற்புரை நிகழ்த்துகிறார். மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் அஞ்சலித் தீர்மானம் வாசிக்கிறார். இதைத்தொடர்ந்து மாநாட்டை துவக்கி வைத்து கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றுகிறார். இதைத்தொடர்ந்து 11 மணியளவில் பிரதிநிதிகள் மாநாடு துவங்குகிறது.
செந்தொண்டர் அணி வகுப்பு
அன்றைய தினம் (மார்ச் 30) மாலை 4 மணி அளவில் மதுரை காளவாசல் பகுதியிலிருந்து செந்தொண்டர் அணி வகுப்பு துவங்குகிறது. இந்த அணி வகுப்பை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைக்கிறார். அணிவகுப்பு, மாலை 5.30 மணியளவில் பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகில் அமைகிற தோழர் என்.நன்மாறன் திடலில் சங்கமிக்க, மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்தில் கலை நிகழ்ச்சிகளை திரைக்கலைஞர் ரோகிணி துவக்கி வைக்கிறார். சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றுகின்றனர். பொதுக்கூட்டத்தில் மாநிலம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். மார்ச் 31, ஏப்ரல் 1 தேதிகளில் பிரதிநிதிகள் மாநாடு தொடர்கிறது. மாநாட்டை நிறைவுசெய்து அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் உரையாற்றுகிறார். மாநாட்டுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.
மக்கள் நலன் காக்கும் பணிகளை தீவிரப்படுத்த திட்டம் வகுப்போம்: கே.பாலகிருஷ்ணன்
மதுரை, மார்ச் 23- தமிழகத்தின் அரசியல் சூழல், எதிர்காலப் பணிகள் கட்சியின் அரசியல் நிலைபாடு, மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்னெடுப்பது, கலை-இலக்கியப் பண்பாட்டுத் தளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீடு, மதவாத பாஜகவை வீழ்த்துவது உள்ளிட்டவை குறித்து மதுரையில் நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு விரிவாக விவாதிக்க உள்ளது என்று மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். மதுரையில் புதனன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: பாஜகவின் மதவெறி அபாயம் தமிழகத்திலும் பரவுகிறது. கல்வி நிலையங்களை காவி மயமாக்குவது, இந்துத்துவா கொள்கை களை புகுத்துவது, பொதுத்துறை நிறுவனங் களை விற்பது, கல்வியை முழுமையாக மாநிலங் களிடமிருந்து பறிப்பது போன்ற விஷயங்களில் கற்பனைக்கே எட்டாத அளவிற்கு ஆபத்தான பாதையில் பயணம் செய்கிறது. இதைத் தடுத்து நிறுத்தி முறியடிக்க வேண்டியது அவசியம்.
தீர்மானம் நிறைவேற்றுக!
ஆளுநர் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வேந்தர் என்ற பதவியைப் பயன்படுத்தி கல்வி நிறுவனங்களை காவிமயமாக்கும் முயற்சி நடைபெறுகிறது. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்றுவது குறித்து தமிழக அரசு சட்டப்பேரவை யில் தீர்மானம் நிறைவேற்றி நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் சிறு சிறு பிரச்சனைகளைக் கூட பாஜக மதப்பிரச்சனையாக மாற்ற முயல்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் 162 ஆண்டுகள் செயல்பட்டுவந்த கிறிஸ்தவ பள்ளியில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதை மதச்சாயம் பூசி அரசியலாக்கியது. சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கூறியது. இதற்கு உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை சென்று உத்தரவு பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்திற்குக் காரணம் “மதமாற்றம்” என்ற இல்லாத பூதத்தை காட்டுகிறது. மதுரை மாவட்டம் மேலூரில் காதலர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையால் நடந்த தற்கொலையை பயன்படுத்தி மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்த முயன்றது. ஆனால் அது வெற்றிபெறவில்லை.
திருவிழாக்களில் பாஜக அரசியல்
கோவில் திருவிழாக்கள் நடந்தால் அங்கு காவிக் கொடியை கட்டி பாஜக அரசியல் நடத்துகிறது. திருவிழா கொண்டாடும் மக்களுக்கும் காவிக் கொடிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. மக்கள் மத நம்பிக்கையின் அடிப்படையில் திருவிழாக் களில் பங்கேற்கின்றனர். அதே நேரத்தில் சகோதர -சகோதரிகளாக-நண்பர்களாக மத நல்லிண க்கத்தோடு உறவைப் பேணுகிறார்கள். கோவிலில் காவிக்கொடியைக் கட்டி மதவெறி அரசியலுக்கு வித்திடும் பாஜக-ஆர்எஸ்எஸ் முயற்சியை முறி யடிக்க கோவில் திருவிழாக்களில் ஆர்எஸ்எஸ்-பாஜகவின் தலையீடு தடுக்கப்பட வேண்டும். இதுகுறித்து மதுரையில் நடைபெறும் மாநில மாநாட்டில் விவாதித்து பொருத்தமான முடிவை எடுப்போம். விவசாயம், சிறு-குறுதொழில் நிறுவனங்கள் பாஜக ஆட்சியில் முடக்கப்பட்டுவிட்டது. பல்லா யிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை யிழந்துள்ளனர். இதற்குக் காரணம் சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மூலப் பொருட்கள் அதானி-அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளின் கையில் உள்ளதுதான்.
காலிப்பணியிடங்களை நிரப்புக!
இன்றைக்கு அரசுப்பணிக்கு ஆள் சேர்ப்பது என்பது இல்லாமல் போய்விட்டது. மதிப்பூதியம், தொகுப்பூதியம், ஒப்பந்தத் தொழிலாளர்களாக அனைவரும் மாற்றப்படுகின்றனர். மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணி யாற்றிய 100 ஓட்டுநர்கள் வேலையிழக்கும் அபாய த்தில் உள்ளனர். ஏனெனில் இப்பணியை மேற்கொண்டு செய்த ஒப்பந்ததாரரின் காலம் முடிந்துவிட்டது. புதிய ஒப்பந்ததாரர் வந்துவிட் டார். இதனால் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய 100 தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. அவர்களை எங்களைச் சந்தித்து முறையிட்டனர். மாநில அரசு நிரந்தர பணி யிடங்களை நிரப்ப முன்வரவேண்டும். தமிழக அரசு தலைஞாயிறு சர்க்கரை ஆலை யை திறப்பதாகக் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறப்பது குறித்து ஏதும் கூறவில்லை. அலங்காநல்லூர் ஆலையையும் திறக்கவேண்டும்.
எரிபொருள் விலை உயர்வு
மொத்தமாக கொள்முதல் செய்யும் டீசல் லிட்டருக்கு ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுப் போக்குவரத்து பாதிக்கப்படும். அரசுப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட ரூ.1,400 கோடி வரை இழப்பு ஏற்படும். மொத்த கொள்முதல் டீசல் விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். ஐந்து மாநிலத் தேர்தல் முடிந்தவுடன் கேஸ் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தப்பட்டுவிட்டது. இது கண்டிக்கத்தக்கது. சர்வதேச சந்தையை விட ரஷ்யாவில் கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ளது. எனவே ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்கிறோம் என ஒன்றிய அரசு கூறுகிறது. குறைவான விலைக்கு கச்சா எண்ணெய் கிடைக்கும்போது டீசல் விலை யை ரூ.25 உயர்த்த வேண்டியதன் அவசியம் ஏன் வருகிறது? பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கையாகும்.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முடியும் வரை அமைதியாக இருப்பது தேர்தல் முடிந்த வுடன் பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, விலைவாசியை உயர்த்துவது என்பதை ஒன்றிய பாஜக அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ள னர். இவர்களில் மாணவர்களும் உள்ளனர் என்பது அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது. பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு போதைப் பழக்கம் ஒரு காரணமாக உள்ளது. போதைப்பொருட்களை ஒழிக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை யையும் படிப்படியாகக் குறைக்க வேண்டும்.
பாதுகாப்பு தருவோம்!
விருதுநகர் மாவட்டத்தில் காதலர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள னர். காதலிப்பவர்கள் தற்கொலை முடிவுக்கு செல்லக்கூடாது. பிரச்சனை எழுந்தால் மாவட்ட நிர் வாகத்தையோ, காவல்துறையையோ அணுகி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவேண்டும். இதற்கும் தயக்கம் இருந்தால் காதலர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங் களுக்கு வரலாம். அவர்களுக்கு உரியபாதுகாப்பு அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார். இலங்கையிலிருந்து பலர் அகதிகளாக மீண்டும் தமிழகம் வருகிறார்களே என செய்தி யாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கே.பாலகிருஷ்ணன், இலங்கை பொருளாதாரம் திவாலாகிவிட்டது. அங்கு ஆட்சியாளர்கள் மக்களுக்குத் தேவையான பொருளாதாரத் தேவை குறித்தோ, தொழில் வளர்ச்சி குறித்தோ கவலைப்படவில்லை. ஆட்சியைப் பிடிக்க சிங்கள, தமிழ் மக்களிடையே மோதலை ஏற்படுத்தி னார்கள். நவீன தாராளமய கொள்கையை பின்பற்றினார்கள். அதன் விளைவை இன்றைக்கு இலங்கை சந்திக்கிறது. இது இந்தியாவிற்கும் ஒரு எச்சரிக்கையாகும் என்றார். பேட்டியின்போது மாநிலச்செயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ் வெங்கட்டராமன், மதுக்கூர் இராமலிங்கம், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்டச் செயலாளர்கள் மா.கணேசன், கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.ராமகிருஷ்ணன், இரா.விஜயராஜன், எஸ்.பாலா ஆகியோர் உடனிருந்தனர்.