tamilnadu

img

உலக அரங்கின் உச்சத்தில் இருக்க வேண்டிய பிரச்சனை

டாகர், மார்ச் 23- உலக அளவிலான நீர் இருப்பு படுமோசமாக இருப்பதை இந்த மாநாடு மூலமாக உலகிற்கு சொல்ல வாய்ப்பு கிடைத்துள் ளது என்று செனகல் ஜனாதிபதி மாக்கி சால் கூறியுள்ளார். உலகம் முழுவதும் குறைந்தது 400 கோடி மக்கள் ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு மாதத்திற்கு கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாட்டை சந்திக்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2030 ஆம் ஆண்டிற்குள் 70 கோடி மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேற வேண்டி வரும் என்றும் அந்தப் புள்ளி விபரங்கள் நமக்கு எச்சரிக்கின்றன. குறிப்பாக, மூன்றாம் உலக நாடுகள் பெரும் நெருக்கடியை சந்திக்க இருக்கின்றன. சர்வதேச அளவில் நாடுகளுக்கிடையில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தும் வகையில் உலக நீர்க்கழகம் உருவாக்கப்பட்டு ஆண்டுதோறும் மாநாடுகள் நடத்தப்படுகின்றன. இந்த மாநாடுகளில் நீர் பற்றாக்குறை குறித்தும், அதை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கிறார்கள்.

கடந்த ஆண்டு இந்த மாநாடு கொரோனா காரணமாக நடைபெறவில்லை. இந்த மாநாட்டு விவாதங்கள் மற்றும் முடிவுகள் அடுத்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை நடத்தும் தண்ணீர் மாநாட்டிற்கு பெரிய அளவில் உதவும் என்று கூறப்படுகிறது. மார்ச் 21 ஆம் தேதி துவங்கிய இந்த மாநாடு மார்ச் 25 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. மாநாட்டின் பேசுபொருள் குறித்துப் பேசிய உலக நீர் கவுன்சிலின் தலைவர் லாய்க் பசோன், “ஒவ்வொரு நாட்டிலும் அனைத்து மக்களுக்கும் தேவையான, குறைந்தபட்ச நீர் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். இதை நிறைவேற்ற, உலகின் அனைத்து நாடுகளின் தலைவர்களும் சட்டங்களை இயற்ற வேண்டும். நிர்வாக ரீதியான ஏற்பாடுகள் செய்து சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். நீதித்துறைக்கு அதிகாரமளித்தல் அவசியம்” என்று தெரிவித்தார். தற்போதைய மாநாடு செனகலில் உள்ள டயம்னியாடியோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ், ஜப்பானின் அரசர் நருஹிட்டோ, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லெயன் உள்ளிட்டோர் விவாதங்களில் தலையிட்டுப் பேசவிருக்கிறார்கள். இவர்களோடு ஏராளமான கல்வியாளர்கள், நிதி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.