நாமக்கல், டிச. 15- வாச்சாத்தி கிராமத்தில் பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்த போராட்டத்தில் வெற்றி பெற்ற செங்கொடி இயக்கத்தின் தலைவர்களை கௌரவித்து, நாமக்கல் மாவட்டம் கொல்லி மலை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். தருமபுரி மாவட்டம் வாச்சாத்தியில், பழங்குடியின மக்களுக்கு எதிராக நடைபெற்ற கொடுமைக்கு எதிராக 31 ஆண்டு காலம், களத்திலும், சட்ட போராட்டமும் நடத்தி குற்றவாளிகள் 269 பேருக்கும் தண்டனை பெற்றுத் தந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மலைவாழ் மக்கள் சங்கம். 30 ஆண்டுகளுக்கு மேலாக இப்போராட்டத்தை தொய்வின்றி எடுத்துச்சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான பெ.சண்முகத்திற்கு பாராட்டு விழா மற்றும் கொல்லிமலை மக்களின் அடிப்படை கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் மனு கொடுக்கும் இயக்கம் கொல்லிமலை செம்மேடு வல்வில் ஓரி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் சின்னனூர் நாடு செயலாளர் எஸ்.கே.மாணிக்கம் தலைமை வகித்தார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தங்கராசு வரவேற்றுப் பேசினார். இதில், பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ரங்கசாமி, ஏ.டி.கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் கே.சின்னசாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர். முன்னதாக, வாச்சாத்தியின் வெற்றிக்கான போராட்டத்திற்கு தலைமையேற்ற பெ.சண்முகத் திற்கு சால்வை அணிவித்து பாராட்டு விழா நடைபெற்றது.
மனுக்கள் அளிப்பு
இதனைத்தொடர்ந்து, கொல்லி மலை மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி தலைவர்கள் உரையாற்றினர். இதில், கொல்லிமலையில் மிகப்பெரிய பிரச்சனையாக திகழ்ந்து வரக்கூடிய ரீ சர்வே குளறுபடி களை சரி செய்ய வேண்டும். பழங்குடியின நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முறை யாக நடத்த வேண்டும்.குடிமனை பட்டா வழங்க வேண்டும். 2006 வன உரிமைச் சட்டப்படி அனுபவ நிலங்களுக்கு பட்டா மற்றும் வனத்தில் கிடக்கக் கூடிய சிறு மகசூலைமலைவாழ் மக்கள் எடுத்துக் கொள்ள உரிய அனுமதி வழங்க வேண்டும். கொல்லிமலையில் உள்ள 14 நாடுகளிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் முறையாக தங்களது அலுவலகம் மற்றும் தங்களது குடியிருப்புகளில் தங்கி பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தனர். இதனையடுத்து வட்டாட்சியரிடம் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் தலைமையில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. இதேபோன்று, ஸ்மார்ட் மீட்டரை தங்கள் வீடுகளில் பொறுத்தக் கூடாது என வலியுறுத்தி சுமார் 800க்கும் மேற்பட்டோர் செம்மேடு மின்வாரிய உதவி செயற்பொறியாளரிடம் மனு அளித்தனர். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் வி.கே.வெள்ளைச்சாமி, எஸ்.கே.ஆண்டி, கேவி.ராஜ், எஸ்.சி.சிவனேசன் எஸ்.பாரதி, ஈ.பன்னீர்செல்வம், சி.சின்னப்பையன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முடிவில், தேவனூர் நாடு கிளைச் செயலாளர் சி.ரேவதி நன்றி கூறினார்.