திருச்சிராப்பள்ளி, மார்ச் 5 - திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 69 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அன்பில் அறக்கட்டளையின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நலத்திட்ட உதவிகள், மருத்துவம் மற்றும் கல்வி உதவித்தொகை என ரூ.3.50 மதிப்புள்ள காசோலைகள், பள்ளிகளுக்கு தேவையான கணினிகள் ஆகியவற்றை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் பேட்டியளித்த போது, “உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்ற திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றுவர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எவ்வித கவலையின்றி, மனமகிழ்வுடன் பயமின்றி படித்து தேர்வை எழுத வேண்டும். தங்களது குறிக்கோளை அடைய வேண்டும். கொரோனா காரணமாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மார்ச் மாத இறுதிக்குள் பாடங்கள் நடத்தி முடிக்கப்படும். ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வு நடைபெற்று பொதுத் தேர்வும் நடைபெறும்” என்றார்.