சென்னை,ஜூலை 19- ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாக தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்படி, 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27.50 உய்தற்ப்பட்டுள்ளது. 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 உயர்த்தப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்தான் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை நிறுத்துவோம் என்று ஒன்றிய பாஜக அரசு அழுத்தம் கொடுத்தது. எரிசக்தி துறை அமைச்சகம் சார்பாக இந்த அழுத்தம் தரப்பட்டது. நீங்கள் நிறுத்தவில்லை என்றால் மத்திய மின் துறை திட்டத்தை நாங்கள் உங்கள் மாநிலத்தில் நிறைவேற்ற மாட்டோம். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு வருடமாக மின்சார கட்டணத்தை உயர்த்தாமல் இருந்தார். ஒரு வருடமாக அவர் மின் கட்டணத்தை மாற்றாமல் இருந்தார். இந்த நிலையில்தான் கடந்த மின்சாரத்துறை கூட்டத்தில் ஒன்றிய அரசு எங்களிடம் அழுத்தம் கொடுத்தது. நீங்கள் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் கண்டிப்பாக மானியம் தர மாட்டோம் என்று கூறிவிட்டது.
28 முறை மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. தனியார் மின் நிறுவனங்களுக்கும் இதற்காக கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில், ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42.19 விழுக்காடு) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 100 யூனிட் வரையிலான இலவச மின்சாரம் தொடரும் என்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இருமாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் 2.37 கோடி வீட்டு மின்நுகர்வோர்கள் பயன் அடைவர். குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டுதலங்கள் முதலிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும். இரு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63.35 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (26.73 விழுக்காடு) மாதம் ஒன்றிற்கு ரூ.27.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு மொத்தம் 300 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 36.25 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (15.30 விழுக்காடு) மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இரு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (7.94 விழுக்காடு) மாதம் ஒன்றிற்கு ரூ.147.50. இரு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 10.56 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (4.46 விழுக்காடு) மாதம் ஒன்றிற்கு ரூ.297.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறுந்தொழில் மின் நுகர்வோர்களுக்கு, குறைந்த அளவாக யூனிட் ஒன்றிற்கு 50 காசுகள் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி நுகர்வோர்களுக்கு 750 யூனிட் மேல், யூனிட் ஒன்றிற்கு 70 பைசா உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் குறைக்கப்பட்ட மின்சாரத்திற்குரிய மின் மானியத்தை நுகர்வோர் விரும்பும் பட்சத்தில் “மின்மானியத்தை தாமாக விட்டுக் கொடுக்கும்” திட்டம் மூலம் அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. வீட்டு நுகர்வோர்கள் தங்கள் மின் வாகனத்தை தங்கள் வீட்டிலேயே அதே விகிதப் பட்டியலில் மின்னேற்றம் செய்து கொள்வதற்கும், அதேபோல், வணிக நுகர்வோர்கள் அதே விகிதப் பட்டியலில் பொது மின்னேற்றம் செய்வதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.