புதுதில்லி, ஜன.24- அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளுக்குத் துரோகம் இழைத்திருப்பதைச் சுட்டிக்காட்டும் விதத்தில் வரும் ஜனவரி 31 அன்று “துரோக தினமாக” அனுசரித்திட வேண்டும் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா விடுத்த வேண்டுகோளை மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடையும் ஏற்றுக்கொண்டுள்ளது. மத்தியத் தொழிற்சங்கங்கள், சுயேச்சையான சம்மேளனங்கள்/சங்கங்களின் கூட்டுமேடையின் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதன்பின்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி 2021 நவம்பர் 19 அன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தபின்னர் எழுந்துள்ள நிகழ்ச்சிப்போக்குகள் குறித்து நாம் கூர்மையாகக் கவனித்துக் கொண்டு வருகிறோம். வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக அரசிடமிருந்து அறிவிப்பு வந்தபோது பொதுவாக மகிழ்ச்சி ஏற்பட்ட அதே சமயத்தில், சம்யுக்த கிசான் மோர்ச்சா, தில்லி எல்லையில் நடைபெற்றுவந்த தர்ணா போராட்டத்தை விலக்கிக்கொண்ட போதிலும், இதற்கிணையான இதர கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில் மிகவும் எச்சரிக்கையாகவே நிலைப்பாட்டினை எடுத்தது.
இவை தொடர்பாக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து எதிர்கால நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என்றும் முடிவு செய்தது. வேளாண் விளைபொருள்கள் அனைத்திற்கும் குறைந்தபட்ச ஆதார விலைக்காக சட்டரீதியான உத்தரவாதப் பிரச்சனை, 2021 மின்சாரத் திருத்தச் சட்டமுன்வடிவை விலக்கிக்கொள்ளுதல், லக்கிம்பூர் கேரி கொலை சம்பவத்தில் தொடர்புடையவர் எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் அஜய் மிஷ்ரா தெனியை அமைச்சரவையிலிருந்து அப்புறப்படுத்துதல் போன்ற கோரிக்கைகள் தொடர்பாக அரசாங்கம், சம்யுக்த கிசான் மோர்ச்சாவிற்கு எழுத்துப்பூர்வமாகக் கொடுத்த உறுதிமொழிகள் எதையும் நிறைவேற்றாமல் ஊசலாட்டத்துடன் இருந்துகொண்டிருப்பது போல் தோன்றுவது துரதிர்ஷ்டவசமானதாகும். விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்தின் முன்னே மண்டியிட்ட பிரதமரின் பிம்பத்தைக் காப்பாற்றும் நோக்கத்துடன் வேளாண் அமைச்சரான நரேந்திர தோமர், வேளாண் சட்டங்களை மீளவும் எப்போது வேண்டுமானாலும் எங்களால் கொண்டுவர முடியும் என்று வெட்கமின்றிக் கூறியுள்ளார். எனவே, சம்யுக்த கிசான் மோர்ச்சா வரும் ஜனவரி 31 தினத்தை “துரோக தினமாக” (“A Day of Betrayal”) அனுசரித்திட வேண்டும் என்று முடிவு செய்திருப்பது மிகச்சரி.
இந்த அரசாங்கம் இழைத்துள்ள துரோகம் கவனிக்கப்படாமல் போய்விடாது என்று இந்த அரசாங்கத்துக்குக் கூற வேண்டியது அவசியமாகும். மேலும், வரும் பிப்ரவரி 23-24 தேதிகளில் நாட்டின் சொத்துக்களை ஒட்டுமொத்தமாகத் தனியாருக்குத் தாரை வார்க்கும் விதத்தில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, தேச விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும், தொழிலாளர்நல சட்டங்களை தொகுப்புச் சட்டங்கள் (Labour Codes) என்ற பெயரில் தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றியிருப்பதை ரத்து செய்ய வலியுறுத்தியும், தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அறிவித்துள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கும் சம்யுக்த கிசான் மோர்ச்சா ஆதரவு அளித்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பதற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். ஜனவரி 31 அன்று கறுப்பு தினமாக அனுசரித்திட சாத்தியமான அனைத்து வழிகளிலும் தங்கள் ஒருமைப்பாட்டு ஆதரவை உறுதி செய்ய வேண்டும் என்று நாடு முழுதும் உள்ள அனைத்து சங்கங்களையும் அறைகூவி அழைக்கிறோம். (ந.நி.)