1990-களில் புதிய பொருளாதார கொள்கை அமலாகத் தொடங்கியதிலிருந்து 21-ஆவது முறையாக இந்திய தொழிலாளி வர்க்கம் 2022 மார்ச் 28,29 - இரண்டு நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.
ஏன் இந்த வேலை நிறுத்தப் போராட்டம்?
‘‘எல்லாவற்றையும் சந்தை தீர்மானிக்கும் என்பது எங்களின் பழைய சித்தாந்தம். எல்லாவற்றிலும் தலையிட்டு கார்ப்பரேட்டுகளுக்கு ராஜபாட்டை அமைத்துக் கொடுத்து, சில ஏகபோக முதலாளிகளை உருவாக்குவதுதான் எங்கள் திட்டம்” என்று ஒன்றிய ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். “இல்லை. நீங்கள் பதவி ஏற்கும்போது அரசமைப்புச் சட்டத்தின் படி நடந்து கொள்வேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு தான் பதவி ஏற்றீர்கள். அரசமைப்புச் சட்டம் ஏகபோகத்தினை தடுக்கும் வகையில் சட்டமியற்றப்பட வேண்டும் என்று வழி காட்டும் நெறிமுறைகளில் தெளிவாகக் கூறியுள்ளது. எனவே எல்லோருக்கும் வருமானப் பகிர்வு சமமாகக் கிடைக்கும் வகையில் சட்டமியற்ற வேண்டும்” என்று பாட்டாளிகள் சொல் கிறார்கள். அதை முன் வைத்து தான் இந்த வேலை நிறுத்தப் போராட்டம்.'
வாரம் 5 நாட்கள் - 35 மணி நேர வேலை'
‘‘தொழிலாளர்களை ஒட்ட சுரண்டுவதுதான் எங்கள் கொள்கை. எனவே நாங்கள் மாநில அரசுகள் மூலமாக வேலை நேரத்தை நாளொன்றுக்கு எட்டு மணி நேரத்தி லிருந்து 12 மணி நேரமாக மாற்றுகிறோம்” என்று ஆட்சி யாளர்கள் சொல்கிறார்கள். “எட்டு மணி நேர வேலை-எட்டு மணி நேர உறக்கம்-எட்டு மணி நேர ஓய்வு என்பது நூறாண்டு களுக்கு முன்பே எங்கள் மூதாதையர்கள் போராடிப் பெற்றுத் தந்த உரிமை. அதை ஒரு போதும் விட்டுத் தரமாட்டோம். “வாரம் ஐந்து நாட்கள்-35 மணி நேர வேலை” என்பதுதான் எங்கள் புதிய கோரிக்கை” என்று பாட்டாளிகள் சொல்கிறார்கள். அதற்காகத் தான் இந்த வேலை நிறுத்தப் போராட்டம்.
கேந்திரமான துறைகள் அரசின் கையில்தான் இருக்க வேண்டும்
‘‘உற்பத்தியில் ஈடுபடுவது அரசின் வேலை இல்லை. பொதுத்துறை நிறுவனங்கள் என்பதே மரணிப்பதற்காக பிறந்தன. எனவே எல்லா தொழில்களிலிருந்தும் அரசு வெளியேறி விடும். சில கேந்திரமான தொழில்களில் மட்டும் அரசு பெயரளவுக்கு இருக்கும்” என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். ‘‘இல்லை. உற்பத்தியில் ஈடுபடுவது அரசின் கடமை. பொதுத் துறை நிறுவனங்கள்தாம் பொருளா தார ஏற்ற-தாழ்வை குறைப்பதற்கான கருவிகளாக செயல்படுகின்றன. குறிப்பாக பாதுகாப்பு (Defense) சக்தி (Energy), போக்குவரத்து (Transport), தொலை தொடர்பு (Communication) நிதி (Finance), கல்வி (Education), சுகாதாரம் (Health) உள்ளிட்ட அனைத்து கேந்திரமான துறைகளும் முழுமையாக அரசின் கையில்தான் இருக்க வேண்டும்” என்று பாட்டாளிகள் சொல்கிறார்கள். அதை வலியுறுத்தித் தான் இந்த வேலை நிறுத்தப் போராட்டம். “எதை அரசின் கைகளில் வைத்துக் கொள்வது; எதை தனியாரிடம் கொடுப்பது என்பதையெல்லாம் நாங்கள்தான் தீர்மானிப்போம். அதற்காக போராட்டம் எல்லாம் செய்யக் கூடாது. அதுவும் கேந்திரமான பாதுகாப்புத் துறையில் கூடவே கூடாது. மீறினால் அத்தியாவசிய பாதுகாப்பு சேவை அவசர சட்டம் (EDSO) கொண்டு வந்து போராட்டத்தை முடக்குவோம்” என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். “அரசின் இந்தப் போக்கை ஒரு போதும் ஏற்க மாட்டோம். எது அரசுத் துறையில் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு எங்களுக்கு முழு உரிமை உள்ளது. நாட்டின் பாதுகாப்பு அரசின் கைகளில் மட்டுமே இருக்க வேண்டும்; தனியார் கைகளுக்கு போகக் கூடாது. இதை வலியுறுத்தி நாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். மீறி முடக்க சட்டம் கொண்டு வந்தால் அதையும் எதிர்த்துப் போராடுவோம்” என்று பாட்டாளிகள் சொல்கிறார்கள். அதற்காகத் தான் இந்த வேலைநிறுத்தப் போராட்டம்.
சங்கம் சேரும் உரிமை, கூட்டு பேர உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்
“எங்கள் அரசு, தொழில் செய்யும் கார்ப்பரேட் கம்பெனி களுக்கு வசதி செய்து கொடுப்பதில் உலகத்தர வரிசையில் முன்னேறி உள்ளது. மேலும் முன்னேறுவதற்காக தொழி லாளர் நலச் சட்டங்களை எல்லாம் நீர்த்துப் போகச் செய்வோம். “அமர்த்து-துரத்து” என்பதை நடைமுறையாக்குவோம். சங்கம் சேரும் உரிமை, கூட்டு பேர உரிமை - என்பதையெல்லாம் அங்கீகரிக்க மாட்டோம்” என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். “நாங்கள் நெடிய போராட்டம் நடத்தி வென்றெடுத்த உரிமைகளை ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். தொழிலாளர் நலச் சட்டங்களை பலப்படுத்த வேண்டும். அனைவருக்கும் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.21000/- உறுதிப்படுத்தப்பட வேண்டும். சர்வதேச தொழிலாளர் ஸ்தாபன தீர்மானங்கள் 87 & 98 ‘‘சங்கம் சேரும் உரிமை, கூட்டு பேர உரிமை” உடனே அங்கீகரிக்கப்பட வேண்டும்” என்று பாட்டாளிகள் சொல்கிறார்கள். அதற்காகத் தான் இந்த வேலை நிறுத்தப் போராட்டம். “எல்லாவற்றையும் மீறி நீங்கள் போராட முன் வந்தால் உங்களை சாதி, மத, மொழி, இன அடிப்படையில் பிரித்தாள்வதற்கான எல்லா சதிகளையும் செய்வோம்” என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். “போராடும் தொழிலாளிக்கு சாதியில்லை, மதமில்லை; இன வெறி இல்லை; மொழி வெறி இல்லை. கொள்கை உண்டு; கோஷம் உண்டு. கோரிக்கைகள் வென்றெடுக்க கோடி கைகள் போராடும்” என்று பாட்டாளிகள் சொல்கிறார்கள்.
செல்வ ஆதாரங்களை உருவாக்குபவர்கள் யார்?
‘கார்ப்பரேட் முதலாளிகள்தாம் இந்த நாட்டின் செல்வ ஆதாரங்களை உருவாக்குபவர்கள் (wealth creators); எனவே அவர்களுக்கு சாதகமாகத்தான் அனைத்துப் பொருளாதார கொள்கைகளும் வகுக்கப்படும்” என்று ஒன்றிய அரசு அறிவித்து, அதற்கேற்றவாறு வரவு-செலவு கணக்கை சமர்ப்பிக்கிறது. ‘‘இந்த நாட்டின் கோடானு கோடி தொழிலாளர்களும், விவசாயிகளும் தாம் செல்வ ஆதாரங்களை உருவாக்குபவர்கள். உற்பத்தியான பொருட்களில் உழைப்பைக் கழித்துப் பார்த்தால் எஞ்சுவது வெறும் கச்சாப்பொருள்தான். உழைப்பாளர் கைப்படாமல் இந்த நாட்டில் எந்த பொருளும் உருவாகாது. எனவே அனைத்து பொருளாதாரக் கொள்கைகளும் உழைப்பாளி களின் நலனை பாதுகாக்கும் வகையிலேயே உருவாக்கப்பட வேண்டும்” என்று பாட்டாளிகள் சொல்கிறார்கள். அதை நிலை நாட்டுவதற்காகத்தான் இந்த போராட்டம்.
வர்க்கப் போராட்டம்
‘‘கார்ப்பரேட் முதலாளிகள் தாம் மூலதனம் (உயயீவையட) கொண்டு வருகிறார்கள்; அவர்கள் தாம் பொருளாதாரத்தின் அச்சாணி. எனவே அவர்களின் நலன்தான் எங்களுக்கு முக்கியம். அதனை பாதுகாப்பதற்காகத்தான் இந்த அரசு உள்ளது” என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். “தொழிலாளிகளும், விவசாயிகளும்தாம் இந்த நாட்டின் முதுகெலும்பு. அவர்களின் உழைப்பில்லாமல் ஓர் அணுவும் அசையாது. பெரு முதலாளிகளின் மூலதனம் எங்கள் முன்னோர்களின் உபரி உழைப்பின் குவியல். எனவே அனைத்து சட்டங்களும் உழைப்பாளிகளின் நலனை பாதுகாக்கும் வகையில்தான் இயற்றப்படவேண்டும்” என்று பாட்டாளிகள் சொல்கிறார்கள். அதை உறுதிப்படுத்தத்தான் இந்த போராட்டம். இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் பெரு முதலாளிகளுக்கும், பாட்டாளிகளுக்கும் இடையேயான வர்க்கப் போராட்டம். இதில் பாட்டாளி வர்க்கம் நிச்சயம் வென்றே தீரும்.